முண்டியம்பாக்கத்தில் அஷ்ட புஜ துர்க்கையம்மனுக்கு பால்குட விழா
விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கத்தில் ஸ்ரீ அஷ்டபுஜ துர்க்கையம்மனுக்கு ஆடி மூன்றாம் வெள்ளிஉற்சவத்தை முன்னிட்டு 108 பால்குட விழா நடந்தது. விக்கிரவாண்டி அருகே உள்ள முண்டியம்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட புஜ துர்க்கை யம்மனுக்கு ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு சக்திவேல் அடிகளார் தலைமையில் 108 பால்குடங்களுடன் பெண்கள் ஊர்வலமாக புறப்பட்டு அம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர்கள் பால் அபிஷேகம் செய்தனர். பின்னர் அம்மன் செவ்வரளி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீப ஆராதனை நடந்தது, பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். அபிஷேகம் மற்றும் பூஜைகளை பனையபுரம் பாபு செய்திருந்தார். விழா ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கருணாகரன், சாந்தி கருணாகரன் குடும்பத்தினர் செய்திருந்தனர். விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் ரமேஷ், விழாக் குழுவினர்கள் ஜோதிடர் கமலக்கண்ணன், குமாரசாமி, வேலாயுதம், ரமேஷ், ராமலிங்கம், மணிகண்டன், சேதுராமன், ஆறுமுகம், கலையரசி, கிராம பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.