புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் போலீசார் ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி:விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் குறித்து, அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர்.
புதுச்சேரியில் வரும் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
இதற்காக மெகா சைஸ் விநாயகர் முதல் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் புதுச்சேரி முழுவதும் பல்வேறு இடங்களில்பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபாடு நடத்துவர். விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை ஊர்வலம் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீஸ் கிழக்கு பிரிவு சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், பொதுப்பணித்துறை, மின்துறை, புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் விழா ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு எஸ்.பி., மாறன் தலைமை தாங்கினார்.
இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், மோகன்குமார், ஹேமச்சந்திரன் உடன் இருந்தனர்.
கூட்டத்தில், ஒவ்வொரு விநாயகர் சிலைக்கும், தனித்தனியாக அனுமதி பெற வேண்டும். சுற்றுச்சூழல்பாதிக்காத வகையிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபட வேண்டும்.
விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்போர், அடையாள அட்டையுடன் பங்கேற்க வேண்டும். ஊர்வலத்தை விரைவில் முடித்துகடலில் கரைக்க வேண்டும். சிலை கரைக்கும் இடத்தில் அனுமதிக்கப்பட்ட தன்னார்வலர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.