பழநிக்கும், பூசத்திற்கும் என்ன சம்பந்தம்?
அசுரர்கள் தொல்லை தாளமுடியாத தேவர்கள், கயிலைநாதரான சிவனைச் சரணடைந்தனர். அவர்களின் குறை தீர்க்க முருகனை அவதரிக்கச் செய்தார் சிவன். அசுரர்களை அழிக்கும் விதமாக முருகனுக்கு அன்னை பார்வதி வேல் கொடுத்து ஆணையிட்டது ஒரு தைப்பூச நாளில் தான். அன்னை கொடுத்த வேலின் துணையுடன் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்த்தினார் முருகன். இதனடிப்படையில் சூரசம்ஹார விழா பழநியில் தைப்பூசத்தன்று நடக்கிறது.
வெற்றிவேல் தாங்கிய வேலவனை தைப்பூசத்தன்று தரிசித்தால், தீயசக்தி அணுகாமல் நம்மைக் காத்தருள்வான். பழநியில் பூசவிழா பத்துநாள் நடக்கும். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவர். திருமணம், தம்பதி ஒற்றுமை, குழந்தைப் பாக்கியம், வியாபார அபிவிருத்தி, நல்ல மகசூல் என பக்தர்கள் அவரவர் விருப்பங்களை முன்வைத்து முருகனுக்கு நேர்த்திக்கடன்களை செலுத்துவர். அலகு குத்துதல், காவடி சுமத்தல், முடிக்காணிக்கை என வழிபாடு மேற்கொள்வர்.
தைப்பூசம் தொடங்கும் முன் பல ஊர்களில் இருந்தும், விரதமிருக்கும் பக்தர்கள் பாதயாத்திரையாக பழநி வருவர். எல்லா முருகன் கோயில்களிலும் இந்த விழா நடக்கும். வெளிநாடுகளில் தைப்பூச விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பழநிக்கு அடுத்த நிலையில் தைப்பூசம் சிறப்பாக இருப்பது பினாங்கு தண்ணீர்மலை முருகன் கோயிலில் தான். பினாங்கு முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தன்று பல நாட்டிலுள்ள தமிழர்கள் கூடுகின்றனர். சீனர்களும் விழாவில் பங்கேற்பது சிறப்பு. காவடி, அலகு குத்துதல் என நேர்த்திக்கடன்களைச் செலுத்துவர். மலேசியாவில் பெரிய பண்டிகையாக தைப்பூசம் கொண்டாடப்படுவ தால் அரசு விடுமுறை அறிவிக்கிறது. பிரபலமான மலேசியா பத்துமலை முருகன் கோயில், கோலாலம்பூரில் இருந்து 12கி.மீ., தொலைவில் உள்ளது.