திருத்தணி முருகன் கோவிலில் வைகாசி கிருத்திகை விழா
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த வைகாசி கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், நான்கு மணி நேரம், நீண்ட வரிசையில், காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, வைகாசி மாத கிருத்திகை விழாவையொட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு, பஞ்சாமிர்தம் அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை, 5:00 மணிக்கு, சாய்ரட்சை பூஜையும், இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று கிருத்திகை, கோடை விடுமுறையின் கடைசி நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க, நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, காவடிகள் எடுத்து வழிபட்டனர். மேலும், அதிகளவில் வாகனங்களில் பக்தர்கள் வந்ததால், திருத்தணி நகரம் மற்றும் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.