உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதநாராயண சுவாமி கோவிலில் நாளை சூரிய பூஜை!

வேதநாராயண சுவாமி கோவிலில் நாளை சூரிய பூஜை!

ஊத்துக்கோட்டை :நாகலாபுரம் வேதநாராயண சுவாமி கோவிலில், 5 நாட்கள் சூரிய பூஜை விழா வரும், 23ம் தேதி துவங்குகிறது. அப்போது சூரிய கதிர்கள் மூலஸ்தானத்தில் உள்ள ஸ்ரீநாராயணன் மீது விழும் திவ்ய ரூப தரிசனத்தை பக்தர்கள் காணலாம். ஊத்துக்கோட்டை அடுத்த ஆந்திர மாநிலம் நாகலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது வேதநாராயணசாமி கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் சில நாட்கள் மூலவர் ஸ்ரீநாராயணன் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகிறது. இக்காட்சியைக் காண ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். இந்தாண்டு வரும், 23ம் தேதி முதல், 27ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.

சூரிய பூஜை வரலாறு: ஸ்ரீமகா விஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து கடல் அடியில் பல வருடங்களாக அசுரனுடன் யுத்தம் புரிந்தார். அதனால் அவரது உடல் மிகவும் குளிர்ச்சி அடைந்தது. அப்போது அவரது உடல் வெப்பமடைவதற்காக சூரிய பகவான் தனது ஒளிக்கதிர்களை அவரது உடலில் விழும்படி செய்கிறார். இதை தான் சூரிய பூஜை விழாவாக 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. மேற்கு திசையை பார்த்து நிற்கும் ஸ்ரீநாராயணன் மீது முதல் நாள் பாதங்களிலும், இரண்டாம் நாள் நாபியிலும்(வயிறு), மூன்றாம் நாள் சுவாமியின் சிரசிலும்(தலை) சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன. ராஜகோபுரத்தில் இருந்து, 600 அடி தூரத்தில் இருக்கும் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுந்து சுவாமியை திவ்யரூப தரிசனம் அளிக்கச் செய்கிறார் சூரிய பகவான். மாலை, 5 மணி முதல், 6 மணி வரை இந்த அற்புத காட்சி நடைபெறும்.

தெப்ப உற்சவம்: வரும், 23ம் தேதி துவங்கும் இந்நிகழ்ச்சியில், 25, 26,27 ஆகிய மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும். முதல் நாளில் ஸ்ரீசீதா சமேத ஸ்ரீராமச்சந்திர சுவாமியும், அடுத்த இருநாட்கள் ஸ்ரீவேதவல்லி சமேத ஸ்ரீவேதநாராயண சுவாமியும் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இவ்விழாவை காண ஆந்திரா, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !