உள்ளூர் செய்திகள்

ஏழைகளுக்கு உதவிய பெண்மணி

இங்கிலாந்தில் செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் எலிசபெத் பிரை. இவரது தந்தை ஜோசப் கர்னி, கர்னிஸ் வங்கியின் பங்குதாரர். தாயார் கேதரின், பார்க்லே வங்கியை நடத்தி வந்த குடும்பத்தை சேர்ந்தவர். எலிசபெத்தின் 12ம் வயதில் அவரது தாயார் கேதரின் மரணமடைந்தார். இவரே குடும்பத்தில் மூத்தவர் என்பதால் தனது தங்கைகளையும், தம்பியையும் மிகவும் சிரமப்பட்டு வளர்த்தார்.18 வயதில் வில்லியம் சேவரி என்ற நற்செய்தியாளர் நடத்திய கூட்டங்களில் கலந்து கொண்டார்.'பசியாயிருந்தேன், எனக்கு போஜனங் கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தை தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னை சேர்த்துக் கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங் கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னை பார்க்க வந்தீர்கள்'' என்ற இயேசு கிறிஸ்துவின் நற்செய்திகளை மையமாகக் கொண்டு சேவரியின் பிரசங்கம் அமைந்தது. மேலும் இயேசு கிறிஸ்து மனிதகுலத்தின் பாவங்களையும் அதன் விளைவான மரண தண்டனையையும் தம்மேல் ஏற்றுக் கொண்டு, சிலுவையில் தம் ஜீவனைக் கொடுத்தவர் என்ற செய்தி எலிசபெத்தை மிகவும் கவர்ந்தது. இயேசு கிறிஸ்துவை அவர் தனது இரட்சகராக ஏற்றுக் கொண்டார். சில மாதங்களுக்குப் பிறகு அவரது சபை சார்பில் நடந்த கூட்டம் ஒன்றில், ''நீ அனேக பார்வையற்றோருக்கு ஒளியாக இருப்பாய்; அனேக ஊமையருக்கு நீ பேச்சாக இருப்பாய்; அனேக முடவருக்கு நீ கால்களாக இருப்பாய்,'' என்று ஒரு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது.இதைக்கேட்ட எலிசபெத் ''இதை ஆண்டவர் எனக்காகத் தான் உரைத்திருக்கிறார்,'' என்று கூறினார். அதன்பிறகு ஏழைகள், நோயாளிகள், சிறைக் கைதிகள் ஆகியோர் மீது அவருக்கு மிகுந்த பரிவு ஏற்பட்டது. தனது குடும்பத்தில் சேர்ந்த பழைய ஆடைகள் மட்டுமின்றிஅனேகரை சந்தித்து பழைய ஆடைகளை சேகரித்து ஏழைகளுக்கு வினியோகம் செய்து வந்தார். நோயாளிகளிடம் ஆறுதலாக பேசி அவர்களுக்காக ஜெபித்தார். கல்வியறிவற்ற குழந்தைகளுக்கு எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொடுத்தார். வேத சத்தியங்களைக் கற்றுக் கொடுத்து அவர்களை தேவனுடைய பிள்ளைகளாக மாற்றினார். இங்கிலாந்திலுள்ள நியூகேட் சிறைச்சாலை கைதிகளின் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியை துவங்கினார்.இங்கிலாந்தின் அரசி விக்டோரியா மகாராணி இவரது நற்பணிகளை பாராட்டினார். பெரும் நன்கொடை கொடுத்தார். அவர் செய்த சமூகப்பணியும் இறைப்பணியும் இன்றும் இங்கிலாந்து மக்களால் பேசப்படுகிறது.