மன்னிப்பு... "இவருக்கு பிடித்த வார்த்தை
ஒரு நாட்டின் ராணுவ வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்ட பின், இரவில் தாங்கள் தங்கியிருந்த முகாமிற்கு திரும்பினர். அவர்கள் தூங்க ஆயத்தமானார்கள். பயிற்சியின் களைப்பையும் பொருட்படுத்தாமல், ஒரு ராணுவ வீரன், தன் படுக்கை விரிப்பின் மீது அமர்ந்த நிலையில் தலையைத் தாழ்த்தி ஜெபித்துக் கொண்டிருந்தான்.அதே கூடாரத்தில், கடவுள் நம்பிக்கையற்ற ஒரு ராணுவவீரன் இருந்தான். தன் சக வீரன் ஜெபித்துக் கொண்டிருப்பதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. பூட்ஸ் காலால் ஓங்கி உதைத்தான். ஆனால், ஜெபித்த வீரனோ அதைப் பொருட்படுத்தாமல் ஜெபத்தைத் தொடர்ந்தான். மறுநாள் காலையில் எழுந்து தன்னை உதைத்தவனுக்காகவும் ஜெபம் செய்தான். உதைத்த பூட்ஸை எடுத்து, அதற்கு பாலீஷ் போட்டான். படுக்கையில் இருந்த நாத்திகன், கண் விழித்தபோது, ஜெபித்த வீரனைக் கண்டு மனம் நெகிழ்ந்தான். இரவு முரட்டுத்தனமாக நடந்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்டதோடு, தானும் இயேசுவை ஏற்றுக் கொண்டான். ''மன்னித்தல் என்பது மன்னிக்கப்பட வேண்டியவர் அதற்குத் தகுதியானவர் தானா என்பதை சார்ந்தது அல்ல என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். மன்னித்தல் என்பது கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிவதைத் தெரிந்து கொண்டு, மனவிருப்பத்தோடு செயல்படும் செயலாகும்'' என்று பிரபல சுவிசேஷகர் ஜாய்ஸ் மேயர் கூறுகிறார்.மன்னித்தல் குறித்து பைபிள் சொல்வதைக் கேளுங்கள். ''மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால் உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால் உங்கள் பரம பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்'' (மத்தேயு 6: 14: 15)''ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (எபே.4:32)