உள்ளூர் செய்திகள்

தீமையே செய்யாதவர்

மனிதர்கள் தண்டனைக்கு ஆளாகும் போது ஆண்டவர் மீது கோபம் கொள்கிறார்கள். காரணமின்றி அவர் யாரையும் தண்டிப்பதில்லை. பின்னால் வருவதை அறிந்தே அவர் நம்மை செயல்படுத்துகிறார். வாலிபர் ஒருவர் கண்மூடித்தனமாக சாலையில் வண்டி ஓட்டியதால் விபத்துக்குள்ளாகி கால்களை இழந்தார். அதற்கு பதிலாக மரத்தால் ஆன கால்களைப் பொருத்த நேர்ந்தது. அதன் பின் ஒருமுறை அவரை காட்டுவாசிகள் கடத்தினர். ''இவனது மாமிசத்தை உண்டு மகிழ்வோம். அதற்கு முன்னதாக கை, கால்களை வெட்டி சூப் போடுங்கள்” என காட்டுவாசிகளின் தலைவன் உத்தரவிட்டான். அவனை வெட்ட முயன்ற போது காலுக்கு பதிலாக கட்டை இருப்பது கண்டு பயந்தனர். தலைவனிடம் தகவலைத் தெரிவிக்க அருகில் வரவே அவன் பயந்தான். ''இவரது கால்கள் நம்மைப் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது. தெய்வப் பிறவியான இவரை வெட்ட வேண்டாம்” என்றதோடு அவனையே தன் குருவாகவும் ஏற்றுக் கொண்டான். அதன் பின் அந்த வாலிபன் அவர்களிடமிருந்து தப்பித்தான். பலவீனம் என நினைப்பது கூட நமக்கு சில சந்தர்ப்பங்களில் பலமாகும்.