பணம் பெருகுது! மனம் சுருங்குது!
இங்கிலாந்தில் வசித்த ஜான்வெஸ்லி என்ற மதபோதகர் ஒருகாலத்தில் குறைந்த வருமானம் உடையவராக இருந்தார். ஆண்டு வருமானமே 30 பவுண்டுகள்தான். இதில் 2 பவுண்டை தர்மம் செய்வார். மீதி அவரது சுயதேவைக்கு போதுமானதாக இருந்தது. ஒருகட்டத்தில் அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆனார். அவரது வருமானம் மிகமிக உயர்ந்து 1600 பவுண்டை எட்டியது. இதனால் அவர் தனது செலவுகளை உயர்த்திக் கொண்டார். வாழ்க்கை முறையே மாறிவிட்டது. ஏழையாக இருந்தபோது, நடந்ததையெல்லாம் மறந்து விட்டார். வீட்டை அலங்கரித்தார். வரவேற்பறையில் விலையுயர்ந்த படங்களை வாங்கி மாட்டி வைத்தார். பணம் காலியாகி விட்டது. இந்த நேரத்தில் அந்த அறையை சுத்தம் செய்ய வேலைக்கார சிறுமி நுழைந்தாள். அப்போது குளிர்காலம். குளிரைத்தாங்கும் அளவிற்குரிய உடையை அவள் அணிந்திருக்கவில்லை. கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்தச்சூழலை பார்த்த ஜான்வெஸ்லி, மிகவும் வருத்தப்பட்டார். 'இப்போதுதான் தேவையற்ற ஒரு பொருளுக்காக, பணத்தை அள்ளிக் கொடுத்தோம். அந்த பணத்தில் இவளுக்கு நான்கைந்து கோட் வாங்கிக் கொடுத்திருக்கலாமே? இவளைப்போல இந்த பூமியில் எத்தனையோ ஏழை சிறுமிகள் உணவின்றி, உடையின்றி தவித்துக் கொண்டிருப்பார்களே, அவர்களுக்கு உதவியிருக்கலாமே!' என்று வருத்தப்பட்டார்.'கடவுள் நம்மை பற்றி என்ன நினைப்பார்?' என்று சிந்தித்தார். தன்னிடத்தில் இருந்த இரக்க உணர்வை, அபரிமிதமான பணம் பறித்துவிட்டதை நினைத்து வெட்கப்பட்டார். மனம் மாறினார். தனக்கு கிடைத்த சம்பளத்தில், முன்பைப்போலவே 28 பவுண்டுக்குள் செலவை நிறுத்திக் கொண்டார். மீதியை ஏழைகளுக்கு கொடுத்தார்.தானதர்மம் செய்ததால் இவர் வருமான வரி கட்டவில்லை. அதிகாரிகள் அவரது வீட்டை சோதனையிட்டனர். 'அதிக வருமானம் இருந்தும் ஏன் வரி கட்டவில்லை?' என கேட்டனர். ஆனால், அவரது வீட்டை சோதனையிட்ட பிறகுதான் அங்கு 2 வெள்ளிக்கரண்டிகளைத் தவிர, வேறு எதுவுமே இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அவரை விட்டுவிட்டனர்.பணம் பெருகப்பெருக மனமும் பரந்ததாக வேண்டும். ஆனால், இன்று பணம் பெருகுது. மனசு சுருங்குது. ஜான் வெஸ்லியைப் போல, உங்கள் மனநிலையையும் மாற்றிக்கொள்வீர்களா!