குருவை பற்றி தெரிந்து கொள்வோம்
* ஆங்கிரச முனிவருக்கும், ஸ்ரத்தா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் 'பிரகஸ்பதி' . தவத்தில் ஈடுபட்டு சிவனருளால் நவகிரகங்களில் ஒருவராகவும், தேவர்களுக்கு குருநாதராகவும் விளங்கும் பேறு பெற்றார். * கிரகங்களில் ஆண்கிரகமான இவருக்குரிய நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. * குருதிசைக்குரிய காலம் 16 ஆண்டுகள். தான் இருக்கும் ராசியில் இருந்து 5,7,9 பார்வைகளால் நன்மையை வழங்குவார். * வேதங்களையும் உணர்ந்தவர் குரு என்பதால் பிரம்மாவுக்கு மிக பிடித்தமானவர். * குரு - தாரா தம்பதியருக்கு சம்யூ நிஸ்யவன், விஸ்வஜித், விஸ்வபுக், வடபாக்னி, ஸ்விஸ்டக்ருதி என்ற மகன்களும், ஸ்வாகா என்ற மகளும் உண்டு. * வடக்கு ஈசான்ய திசைக்கு அதிபதி. புஷ்பராக மாலையை அணிந்தவர். தண்டம், கமண்டலம், அட்சமாலை, வரத ஹஸ்தம் கொண்ட கோலம் உடையவர். * எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருபவர். சூரியனுக்கு வடக்கில் அமர்பவர். இவருக்குரிய எண் 3 * பிருஹத் பிரம்மா, பிருஹன் மனஸ், பிருஹத் ஜோதிஸ், பிருஹன் மந்திர, பிருஹத்பாஸ் என்னும் ஐவரும் இவரது உடன்பிறந்தவர்கள். * அதிதேவதை பிரம்மா. பிரத்யதி தேவதை இந்திரன். இவர்களை வணங்கினால் குருவருள் கிடைக்கும். * நீதிகாரகர், திரிலோகேசர், லோக பூஜ்யர், கிரகாதீசர், கருணைக்கடல், துாயவர், நீதி சாஸ்திர ஆசிரியர், களங்கமற்றவர் என இவர் போற்றப்படுகிறார். * குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். வாழ்வின் எல்லா நலன்களையும் வளங்களையும் தருபவர் குருபகவான். * தென்குடித்திட்டை, ஆலங்குடி, திருவலிதாயம் (பாடி), திருச்செந்துார், குருவித்துறை, ஆழ்வார்திருநகரி, திருத்தணி இவருக்குரிய பரிகார தலங்கள். * தானியம் - கொண்டைக் கடலை, கிழமை - வியாழன், நிறம் - மஞ்சள், ரத்தினம் - புஷ்ப ராகம், உலோகம் - பொன், ஆடை - மஞ்சள் ஆடை. * 'சனியைச் சாய்வாய் கும்பிடு!' 'குருவை நேராய் நின்று கும்பிடு' என்பார்கள். அதிகாலையில் குருமுகத்தில் விழித்தால், நினைத்த காரியம் யாவும் வெற்றி பெறும். * எல்லா தெய்வங்களுக்கும் மற்றவரைக் கொண்டு வழிபாடு செய்யலாம். குருபகவானை மட்டும் அவரவரே வழிபட்டால்தான் நன்மை கிடைக்கும். * நாட்டை திறமையானவர்களை கொண்டு ஆள வைப்பதும், நவீன அறிவியல் வித்தைகளை கொடுப்பதும் இவரே. எனவே இவரை வணங்கினால் நாட்டுக்கு நன்மை. * திருமண பந்தத்திற்கு ஆதாரமாக இருப்பவர் குருபகவான். இவரின் அருள் இருந்தால் எளிதில் திருமண யோகம் அமையும். * குருவின் அருள் இருந்தால் முட்டாளும் அறிவாளியாகலாம். மாணவர்கள் இவரை வழிபட்டால் படிப்பில் சிறந்து விளங்குவர். * சாந்த மூர்த்தியாக விளங்கும் குருபகவான், சதுர பீடத்தில் இருப்பவர். கிழக்கு நோக்கி அமர்பவர். சுக்கிரனுக்கு எதிரானவர். குளுமையான பொருளை விரும்புபவர்.