சுகப்பிரசவ ஈஸ்வரன்
சுகப்பிரசவம் நடந்து தாயும் சேயும் நலமுடன் வாழ விருப்பமா... மங்களூரு அருகிலுள்ள புத்துார் மகாலிங்கேஸ்வரர் கோயிலுக்கு வேண்டிக் கொண்டு தரிசனம் செய்யுங்கள். ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் கேரளபாணியில் அமைந்த இந்த மரக்கோயில் 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். முன்பொரு காலத்தில் கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை தரிசித்த அந்தணர் ஒருவர், சிவலிங்கம் ஒன்றுடன் தெற்கு நோக்கி வந்தார். மைசூரு சாலையிலுள்ள உப்பினன்குடி என்ற புத்துார் நோக்கிச் சென்ற அவர், அன்றாடம் செய்யும் நித்ய பூஜைக்கு நேரம் நெருங்கவே அருகில் தென்பட்ட அரண்மனை நந்தவனத்திற்குள் நுழைந்தார். அங்கு பதற்றமுடன் இருந்த அமைச்சர், ஒளி பொருந்திய வடிவம் கொண்ட அந்தணரைக் கண்டதும் ஓடி வந்தார். '' ஐயா... இளவரசி பிரசவ வேதனையால் துடிக்கிறாள். குழந்தை பிறக்க தாமதமாகி கொண்டிருக்கிறது. நீங்கள் தான் ஆசியளித்து வழிகாட்ட வேண்டும்'' என முறையிட்டார். 'சிவபூஜைக்கு தேவையான மலர்கள், நீர் கொடுத்து உதவுங்கள். சிவனருளால் சுகப்பிரசவம் நடக்கும்'' என வாக்களித்தார். அமைச்சர் விஷயத்தை மன்னரிடம் தெரிவிக்க அரண்மனைக்குள் ஓடினார். நல்லபடியாக இளவரசிக்கும் பிரசவம் நடந்தது. அந்தணரைக் காண அமைச்சருடன் வந்த போது பூஜை செய்த சிவலிங்கத்தை நகர்த்த முடியவில்லை. பட்டத்து யானையை கொண்டு இழுத்தும் பலனில்லை. நாளடைவில் பெரிதாக வளர்ந்த அந்த லிங்கம் 'மகாலிங்கேஸ்வரர்' என்னும் பெயரில் இங்கு கோயில் கொண்டிருக்கிறார். அந்தணரின் வாரிசுகளே தற்போது பூஜை செய்கின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற தேர்த்திருவிழாவில் அன்னதானம் அளித்தால் மகாலிங்கேஸ்வரர் அருள் கிடைக்கும் என்கின்றனர். சுகப்பிரசவ வேண்டுதல் நிறைவேறியவர்கள் இங்கு தரிசிக்க வருகின்றனர். இங்கு பார்வதிதேவி, கணபதி, சுப்பிரமணியர், சாஸ்தா சன்னதிகள் உள்ளன. தலவிருட்சம் அரசமரம். கோயிலுக்கு வெளியே உள்ள குளத்தின் நடுவில் வருணனுக்கு சிலை உள்ளது. யானைகள் குளத்துநீரை குடித்தால் இறக்க நேரிடும் என்பதும், இக்கோயிலுக்கு யானை கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. எப்படி செல்வது: மங்களூருவில் இருந்து 69 கி.மீ., விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, மகாசிவராத்திரி, தேர்த்திருவிழா.நேரம்: அதிகாலை 5:00 - 1:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 082512 - 30511அருகிலுள்ள தலம்: மங்களூரு ஸ்ரீ சூரியநாராயணர் கோயில் 70 கி.மீ., (அரசு வகையில் நன்மை நடக்க...)நேரம்: அதிகாலை 5:00 - 1:00 மணி; மாலை 5:00 - 8:30 மணிதொடர்புக்கு: 0824 - 243 9524