உள்ளூர் செய்திகள்

தாராபிஷேக சிவன்

பாண்டவர்கள் வழிபாடு செய்த சிவன் கர்நாடக மாநிலம் மங்களூருவில் பாண்டேஸ்வரர் என்னும் பெயரில் இருக்கிறார். இவருக்கு தாராபிேஷகம் செய்தால் தடங்கல் இன்றி திருமணம் நடக்கும். பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சூதாட்டத்தில் தோற்றார். அவர்களின் மனைவி திரவுபதியை பலர் முன்னிலையில் கவுரவர்களில் மூத்தவனான துரியோதனன் அவமானப்படுத்தினான். அவமானம் தாங்காத அவள், 'குருக்ஷேத்திர போரில் துரியோதனனின் தலை உருண்டால் தான் என் கூந்தலை அள்ளி முடிவேன்' என சபதமிட்டாள். இதன் பிறகு பாண்டவர்கள் காட்டிற்குப் புறப்பட்டனர். ஓரிடத்தில் அவர்கள் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தனர். அந்த லிங்கம் இருந்த இடத்தில் கோயில் உருவானது. சுவாமிக்கு 'பாண்டேஸ்வரர்' எனப் பெயர் வந்தது. கோயில் முகப்பில் பிரம்மாண்டமான சிவன், நந்தி சிலைகள் உள்ளன. பஞ்சுளி, முண்டித்தாயா, வைத்தியநாதர், லட்சுமிநாராயணர் சன்னதிகள் உள்ளன. சிவனின் ஜடாமுடி கருவறையைச் சுற்றி விரிந்து கிடப்பதாக கருதப்படுவதால் கருவறையைச் சுற்றுவதில்லை. கார்த்திகை சோம வார நாட்களில் ருத்ர யாகம், ருத்ரபூஜை நடத்துகின்றனர். இதைத் தரிசித்தால் எதிரி தொல்லை மறையும்.நாகதோஷம் தீர வெள்ளி அன்று காலை 10:30 - 12:00 மணிக்குள் ராகு காலத்தில் பாம்பு புற்றில் பால் ஊற்றுகின்றனர். பாண்டேஸ்வரருக்கு ஜலதாரை வழிபாடு நடக்கிறது. 108 துளைகள் இடப்பட்ட கலசத்தில் புனித நீர் நிரப்பப்பட்டு கருவறையில் சிவலிங்கம் மீது கட்டப்படுகிறது. இதன் துளை வழியாக சுவாமிக்கு அபிஷேகமாவதை 'தாராபிஷேகம்' என்கின்றனர். தடைகள் விலகி திருமணம் நடக்கவும், குழந்தைப்பேறு, வேலைவாய்ப்பு கிடைக்கவும் இந்த வழிபாட்டைச் செய்கின்றனர். தலவிருட்சமான அரசமரம் கோயிலுக்கு எதிரில் உள்ளது. எப்படி செல்வது: மங்களூரு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து 1.5 கி.மீ,விசேஷ நாள்: சித்திரையில் பிரம்மோற்ஸவம், திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி.நேரம்: அதிகாலை 5:30 - 1:00 மணி; மாலை 4:30 - 8:00 மணிதொடர்புக்கு: 0824 - 244 1210அருகிலுள்ள தலம்: மங்களூரு குத்ரோலி கோகர்ணநாதேஸ்வரர் கோயில் 6 கி.மீ., (கடன் தீர...)நேரம்: காலை 6:00 - 2:00 மணி; மாலை 4:30 - 9:00 மணிதொடர்புக்கு: 0824 - 249 4040, 249 5740