உள்ளூர் செய்திகள்

அட்மிஷன் வேளையில் இன்னம்பூர் வாங்க!

குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் இந்த நேரத்தில், கும்பகோணம் அருகிலுள்ள இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயிலில் வழிபாடு செய்தால், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். தல வரலாறு: சோழமன்னனின் கணக்கரான சுதன்மன் ஒருமுறை காட்டிய கணக்கில் சந்தேகம் ஏற்பட்டது. உரிய கணக்கை சரியாகக் காட்டும்படி கடுமையான உத்தரவிட்டான். சரியான கணக்கு காட்டியும், தன் மீது பழி வந்துவிட்டதே என எண்ணிய அவர், சிவனை வேண்டினார். உடனே சிவன் சுதன்மனின் வடிவத்தில் மன்னனிடம் சென்று ஐயத்தைப் போக்கினார். சுதன்மன் சற்றுநேரம் கழித்து கணக்குடன் செல்லவே, ''ஏற்கனவே காட்டிய கணக்கை மீண்டும் ஏன் காட்ட வருகிறீர்?'' என மன்னன் சொல்ல, தனக்குப் பதிலாக இறைவனே வந்து கணக்கு காட்டிய விபரத்தை மன்னனிடம் எடுத்துரைத்தார். வருத்தப்பட்ட மன்னன்,சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டதுடன், ஈசனுக்கு கோயிலும் எழுப்பினான். சுவாமிக்கு 'எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர்' என்ற திருநாமம் ஏற்பட்டது. 'அட்சரம்' என்றால் 'எழுத்து'. இது சுயம்புலிங்கம் என்பதால் 'தான்தோன்றீயீசர்' என்றும் பெயர் உள்ளது. அகத்தியருக்குத் இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது. அம்பாள் கொந்தார் குழலம்மை என்னும் சுகந்த குந்தலாம்பாளுக்கு தனி சந்நிதியும், நித்திய கல்யாணி அம்மனுக்கு தனி சந்நிதியும் ஆக இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. சூரியன் இத்தலத்தில் வழிபட்டு அதிக ஒளியைப் பெற்றான். அவனுக்கு 'இனன்' என்றும் பெயர் உண்டு. இறைவனை சூரியன் நம்பி வழிபட்டதால் ' இனன் நம்பு ஊர்' என்று பெயர் ஏற்பட்டு 'இன்னம்பூர்' என்று மாறிவிட்டது.சிறப்பம்சம்: பள்ளியில் சேர உள்ள குழந்தைகள் அட்மிஷனுக்கு முன்னதாக இங்கு வந்து அர்ச்சனை செய்து கொள்ளலாம். இங்கு நெல்லில் எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு செம்பருத்தி பூவை தட்டில் பரப்பி எழுத பயிற்சி தரப்படுகிறது. பேச்சுத்திறமை இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவுக் கூர்மை பெறும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியத்துக்காக இங்குள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்கின்றனர். சூரிய பூஜை நாட்கள்: லிங்கம் மீது சூரிய ஒளி ஆவணி 31, புரட்டாசி 1, 2, பங்குனி 13, 14, 15 தேதி காலையில் விழுகிறது. இதனை சூரிய பூஜையாக கருதுகின்றனர்.இறைவனின் விளையாட்டு: இங்குள்ள கஜப்பிருஷ்ட விமானம் யானை படுத்திருப்பது போன்று உள்ளது. இதில் ஐந்து கலசங்கள் உள்ளன. இவை சிருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), சம்ஹாரம் (அழித்தல்), திரோபவம் (மறைத்தல்), அநுக்கிரகம் (அருளல்) என்றும் ஐந்து தொழில்களை இறைவன் செய்வதைக்குறிக்கிறது. திறக்கும் நேரம்: காலை7- பகல் 12 ம ணி, மாலை 4- இரவு 8 மணி.இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து திருப்புறம்புயம் செல்லும் ரோட்டில் 8 கி.மீ., தூரத்தில் இன்னம்பூர் உள்ளது. விஜயமங்கை, திருப்புறம்புயம், திருவைகாவூர், ஆதனூர், சுவாமிமலை, திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், கொட்டையூர் ஆகிய சிவன் கோயில்கள் இவ்வூரைச் சுற்றி அமைந்துள்ளன.போன்: 96558 64958.