குட் டே விநாயகர்
கர்நாடகா உடுப்பி மாவட்டத்தில் கும்பாசி ஆனைகுட்டேயில் விநாயகர் கோயில் கொண்டிருக்கிறார். இவரை வழிபட்டால் நல்லநாளாக (குட் டே) அமையும். தல வரலாறு: மங்களூருவை சுற்றி உள்ள வனப்பகுதியில் வறட்சி நிலவியது. அங்கிருந்த முனிவர்கள் அகத்தியரின் உதவியை நாடினர். அகத்தியர் பிரச்னை தீர தவம் மேற்கொண்டார்.கும்பாசுரன் என்னும் அசுரன் தவத்திற்கு இடையூறு செய்தான். அசுரனை அழிக்குமாறு அகத்தியர் விநாயகரிடம் முறையிட்டார். கும்பாசுரனை அழிக்கும் சக்தி, பாண்டவர்களில் ஒருவனான பீமனுக்கு இருந்ததால் விநாயகர் யானை வடிவில் தோன்றினார். அவரது தும்பிக்கையில் ஆயுதம் ஒன்று இருந்தது. யானை வருவதை கண்ட பீமன், அதனை பின் தொடர்ந்தான். ஆனால், யானை ஆயுதத்தை கீழே நழுவ விட்டு மறைந்தது. அந்த ஆயுதத்தை கையில் ஏந்திய பீமன், இடையூறு செய்த அசுரனை கொல்ல நேர்ந்தது. விநாயகரின் அருளால் மழையும் பொழிந்தது. மகிழ்ந்த முனிவர்கள் இங்கிருந்த குன்றில் கோயில் கட்டினர். கும்பாசுரனின் பெயரால் இப்பகுதி 'கும்பாசி' எனப்பட்டது. ஆனே குட்டே என்பதற்கு 'யானைக் குன்று' என்பது பொருள். விஷ்ணுரூப கணபதி: ஒரே கல்லினால் ஆன விநாயகர் 12 அடி உயரத்தில் நெற்றியில் நாமம் அணிந்து விஷ்ணுரூப கணபதியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு விஷ்ணு ரூப பரமாத்மா, சித்தி விநாயகர், சர்வ சித்தி பிரதாய்கா என்றும் பெயருண்டு. மேலிரு கைகளில் பாசம், அங்குசம் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். கீழ் வலது கையால் பக்தர்கள் விரும்பும் வரம் அளிக்கவும், கீழ் இடக்கையால் சரணடைந்தவரை காக்கவும் செய்கிறார்.அரிசி கணபதி பூஜை: விநாயகர் அருளால் வேண்டுதல் நிறைவேற பெற்றவர்கள் 'அரிசி கணபதி பூஜை' செய்து வழிபடுகின்றனர். இதற்காக 400 கிலோ அரிசி, 125 தேங்காய்களை பயன்படுத்தி விநாயகரை அலங்கரிப்பர். இதற்கு 'மூடுகணபதி பூஜை' என்றும் பெயருண்டு. தினமும் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்படுகிறது.வெள்ளிக்கிழமையில் உலக நன்மைக்காக விளக்கேற்றி வழிபடுகின்றனர். இது 'ரெங்க பூஜை' என அழைக்கப்படுகிறது.அபிஷேகத்திற்காக கோயில் அருகிலுள்ள மலை உச்சியிலுள்ள மகாலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுக்கப்படுகிறது. கோயில் வாசலில் சிவன், பார்வதியுடன் இருக்கும் கைலாய காட்சியை தரிசிக்கலாம். நோய் தீர துலாபாரம்: சங்கடஹர சதுர்த்தியன்று நோய் தீர பக்தர்கள், தாம் விரும்பும் பொருளை துலாபார காணிக்கை செலுத்துகின்றனர். திருமணத்தடை நீங்கவும், லாபம் பெருகவும் ''கணபதி ஹோமம்'' நடத்துகின்றனர். பறவைகள், கால்நடைகளுக்கு நோய் ஏற்படாமல் இருக்க கார்த்திகை மாதத்தில் ''பட்சி சங்கர பூஜை'' நடத்தப்படுகிறது.எப்படி செல்வது?* மங்களூரு- - கொல்லூர் சாலையில் 96 கி.மீ.,* உடுப்பியிலிருந்து 30 கி.மீ.,* பெங்களூரு-- மங்களூரு சாலையில் 400 கி.மீ.,மங்களூரு, உடுப்பியில் இருந்து பஸ் உண்டு. விசேஷ நாட்கள்: விநாயகர் சதுர்த்தி, மகா சங்கடஹர சதுர்த்தி, மார்கழியில் பிரம்மோற்ஸவம் நேரம்: அதிகாலை 5:30 - 12:30 மணி; மாலை 4:30 - 9:00 மணிதொடர்புக்கு: 08254 - 261 079, 267 397, 272 221