உள்ளூர் செய்திகள்

பரங்கிப்பேட்டை முருகன்

இமயமலையில் இருக்கும் பாபாஜியின் தந்தை சுவேதநாதைய்யர் அர்ச்சகராக பணிபுரிந்த முருகன் கோயில் (முத்துக்குமார சுவாமி) கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் உள்ளது.நமுசி என்ற அசுரன் எந்த ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்ற வரத்தை சிவனிடம் பெற்றான். இதைப் பயன்படுத்தி தேவர்களை துன்புறுத்தினான். இம்சை தாங்காத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். வரத்தைத் தவறாகப் பயன்படுத்திய அசுரனைக் கொல்ல சிவன் முடிவெடுத்தார்.“ஆயுதத்தால் தானே அவனுக்கு அழிவில்லை. கடல்நுரையை வீசினால் அவன் அழிந்துபோவான்,” என சொல்லி தன் சக்தியை நுரை மீது பாய்ச்சினார். இந்திரனும் நமுசி மீது நுரையை வீசிக் கொன்றான். தனக்கு உதவிய சிவனுக்கு இந்திரன் லிங்கம் வடித்து சிதம்பரம் அருகிலுள்ள பரங்கிப்பேட்டையில் பிரதிஷ்டை செய்தான். இங்கு சுவாமி விஸ்வநாதர் என்றும், அம்மன் விசாலாட்சி என்றும் பெயர் பெற்றனர். காலப்போக்கில் இங்கு முத்துக்குமார சுவாமி சன்னதி அமைந்தது. அதற்கு தனி கொடிமரம் அமைக்கப்பட்டது. பின்னர் முத்துக்குமார சுவாமி கோயில் எனவும் மாறியது. பதவி இறக்கம், பொருள் இழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்ததைப் மீண்டும் பெற விஸ்வநாதருக்கு சம்பா சாதம் படைத்து வழிபடுகின்றனர்.கருவறை சுற்றுச்சுவரிலுள்ள பிரம்மா மிக விசேஷமானவர். பொதுவாக பிரம்மா நின்ற நிலையில் இருப்பார். இங்கோ கைகூப்பி அமர்ந்த நிலையில் நிற்கிறார். ஓம் என்னும் பிரணவ மந்திரத்துக்கு பொருள் தெரியாததால், முருகனால் தண்டிக்கப்பட்ட இவர், தன்னை விடுவிக்கும்படி கேட்டு நிற்பதாக ஐதீகம். இங்குள்ள அஷ்டபுஜ துர்க்கைக்கு வளர்பிறை அஷ்டமியில் அபிஷேகம் நடக்கிறது.முத்துக்குமார சுவாமிக்கு ஆறுமுகங்கள் உள்ளன. நம் பார்வையில் ஐந்து முகங்கள் தெரியும். ஒருமுகம் சுவாமியின் பின்புறம் உள்ளது. ஆறு முகங்களுக்கும் தனித்தனியாக பூஜை செய்யப்படுகிறது. செவ்வாய்க்கிழமையில் இவருக்கு செவ்வரளி மாலை சாத்தி 'சத்ருசம்ஹார திரிசதி' என்னும் எதிரிபயம் போக்கும் அர்ச்சனை நடக்கிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இதைச் செய்ய திருமணத்தடை நீங்கும். தேன் நைவேத்யம் செய்து பிரசாதமாக கொடுப்பர். மலையில் பிறந்த வள்ளியின் மீது அன்பு கொண்டவர் முருகன் என்பதால் தேன் படைக்கின்றனர்.திருவிழாவின் போது சிவனுக்குரிய ரிஷபம், இந்திரனுக்குரிய ஐராவத யானை, ஆடு, இடும்பன் ஆகிய வாகனங்களில் முருகன் பவனி வருகிறார். இங்கு கந்தசஷ்டி விழா சிறப்பாக நடக்கும். சஷ்டிக்கு மறுநாள் தெய்வானை கல்யாணமும், தைப்பூசத்தன்று வள்ளி கல்யாணமும் நடக்கிறது. இங்குள்ள ஐயப்பனுக்கு தமிழ்மாதப் பிறப்பன்றும், பைரவருக்கு அமாவாசையன்று இரவில் பூஜை நடக்கிறது. நாகதோஷம் அகல ஐந்துதலை நாகர் சன்னதியில் வழிபடுகின்றனர். இந்தக் கோயிலின் சற்று துாரத்தில் இமயமலையில் தவமிருந்த பாபாஜியின் கோயில் உள்ளது. எப்படி செல்வது: சிதம்பரத்தில் இருந்து 22 கி.மீ., விசேஷ நாட்கள்: கந்தசஷ்டி, தைப்பூசம்நேரம்: காலை 8:00- - 12:00 மணி; மாலை 5:00 - - 8:00 மணிதொடர்புக்கு: 84184 11058, 98940 48206அருகிலுள்ள தலம்: 22 கி.மீ., துாரத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில்