உள்ளூர் செய்திகள்

சீதனம் தர பணமில்லையா! சிக்கல் தீர்க்கிறார் வைகுண்டவாசர்!

சீதனப் பிரச்னையில் தடங்கல் ஏற்பட்டு திருமணம் முடியாத பெண்கள் எத்தனையோ பேர் உள்ளனர். இவர்கள் தங்கள் பிரச்னை தீர, சென்னை மாங்காடு வைகுண்டவாசர் கோவிலுக்கு சென்று வரலாம்.தல வரலாறு: சிவனின் கண்களாக உலகிற்கு ஒளி தரும் சூரிய சந்திரர் உள்ளனர். கைலாயத்தில் ஒருசமயம் சிவனின் கண்களை, பார்வதிதேவி விளையாட்டாக மூடவே உலகம் இருண்டது. உயிர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயின. இதனால் சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சாபமிட்டார். பூலோகத்தில் மானிடப்பிறப்பெடுத்த அம்பாள், சிவன் தன்னைத் திருமணம் செய்ய வேண்டுமென தவத்தில் ஆழ்ந்தாள். இந்த சமயத்தில், அசுர குருவான சுக்கிராச்சாரியாரும் சிவனை வேண்டி பூலோகத்தில் தவமிருந்து வந்தார். மனைவியை விட பக்தனுக்கு முதலிடம் தந்த சிவன், சுக்ராச்சாரியாருக்கு முதலில் காட்சி தந்தார். பிறகு அம்பிகைக்கும் காட்சி தந்து, காஞ்சிபுரத்துக்கு சென்று தவமிருக்கும்படியும், அங்கு வந்து மணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்தார். அம்பிகையும் காஞ்சிபுரம் சென்று தவ வாழ்க்கையைத் தொடர்ந்தாள். அம்பிகையும், சுக்ராச்சாரியாரும் தவம் புரிந்த இடத்தில் மாமரங்கள் அடர்ந்திருந்தன. எனவே அப்பகுதி மாங்காடு என பெயர் பெற்றது. இந்த சமயத்தில் தங்கை பார்வதிக்காக வைகுண்டத்திலிருந்து மகாவிஷ்ணு சீர் கொண்டு வந்தார். மாங்காட்டில் தங்கையைக் காணாமல் தவித்த சமயத்தில், மார்க்கண்டேய மகரிஷி அவரைக் கண்டு அம்பாள் காஞ்சிபுரம் சென்று விட்ட தகவலைக் கூறினார். மாங்காட்டில் தங்கும்படி கேட்டுக் கொண்டார். பெருமாளும் வைகுண்டவாசர் என்னும் திருப்பெயருடன் இத்தலத்தில் எழுந்தருளினார்.சீதனத்துடன் பெருமாள்: ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் காட்சி தரும் பெருமாளின் அருகில் மார்க்கண்டேயர் தியான நிலையில் இருக்கிறார். தங்கைக்கு திருமணச்சீராக பெருமாள் கொண்டு வந்த மோதிரம் வலது கையில் இருக்கிறது. கனகவல்லித்தாயார் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். பிரகாரத்தில் ஆண்டாள், ஆஞ்சநேயர், திருக்கச்சிநம்பிகள், நம்மாழ்வார், ராமானுஜர், விஷ்வக்சேனர் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. விமரிசையாக திருமணம்: புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வழிபட்டால் பொருளாதாரத் தடை நீங்கி திருமணம் விமரிசையாக நடந்தேறும் என்பது ஐதீகம். வைகுண்டத்தில் இருந்து நேரடியாக பெருமாள் இங்கு வந்து தங்கியதால், 'பூலோக வைகுண்டம்' என்ற சிறப்புப்பெயரை இக்கோவில் பெறுகிறது. மேலும், வைகுண்டமே இங்கிருப்பதால் சொர்க்கவாசல் அமைக்கப்படவில்லை. ஏகாதசி நாட்களில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். கருவறை எதிரே கருடாழ்வார் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். மாறுபட்ட துவாரபாலகர்: பெருமாள் கோவில்களில் ஜெயன், விஜயன் ஆகியோரே துவாரபாலகர்களாக இருப்பது வழக்கம். இங்கு அவிரட்சகன், அக்னி என்னும் பெயரில் துவார பாலகர்கள் உள்ளனர். மாங்காடு காமாட்சிஅம்மன் கோவிலும், சிவன் சுக்ராச்சாரியாருக்கு காட்சி தந்த வெள்ளீஸ்வரர் கோவிலும் சற்று தூரத்தில் உள்ளன. இருப்பிடம்: சென்னை - கோயம்பேட்டில் இருந்து 15 கி.மீ., நேரம்: காலை 6:30 - மதியம் 1:00, மாலை 4:30 - இரவு 9:00 மணி தொலைபேசி: 044 - 2679 0053