உயர் கல்விக்கு முருகனை தரிசியுங்க!
உயர் கல்விக்கு தயாராகும் மாணவர்கள், தடையின்றி இடம் கிடைக்க, திருவாரூர் மாவட்டம் திருக்களர் கிராமத்திலுள்ள பாரிஜாதவனேஸ்வரர் கோவிலிலுள்ள முருகனை, வியாழனன்று வழிபட வேண்டும்.தல வரலாறுபதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்கு, சிவன் நடன தரிசனம் அளித்தார். இதையறிந்த துர்வாசர், தானும் நடனத்தைக் காண எண்ணி சிவபூஜை செய்தார். ஒரு வனத்தில் பாரிஜாத மரங்களை நட்டார். தேவலோக தச்சரான விஸ்வகர்மா மூலம், சிவன் கோவில் அமைத்து வழிபட்டார். அவரது பக்தியை ஏற்ற சிவன் நடனக்காட்சி அளித்தார். இந்நடனத்தை 'களரி' என்பர். அதனால் இவ்வூர் 'திருக்களரி' எனப்பட்டது. பின் 'திருக்களர்' என மருவியது. சுவாமி, அம்மன் சன்னிதிகள் கிழக்கு நோக்கி உள்ளன. அம்மனுக்கு அமிர்தவல்லி, இளம்கொம்பன்னாள் என்று இரு பெயர்கள். வலம்புரி விநாயகர், விஸ்வநாதர், கஜலட்சுமி, அகத்தியர், நாயன்மார், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், துர்க்கை, லட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு பிரகாரத்தில் சன்னிதிகள் உள்ளன. அஷ்டபுஜ துர்க்கை, சிங்கத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அகோர வீரபத்திரர் தனி சன்னிதியில் இருக்கிறார். 80 அடி உயரத்தில் ராஜ கோபுரம் உள்ளது. தீர்த்தம் துர்வாச தீர்த்தம் எனப்படுகிறது. படிப்புக்கு வழிபாடுதுர்வாசருக்கு சிவனுக்குரிய 'நமசிவாய' என்ற மந்திரம் உபதேசித்த சண்முகர் (முருகன்) தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். ஆறு முகங்கள், 12 கைகளுடன் இருக்கும் இவர், குரு அம்சமாக உள்ளார். வள்ளி, தெய்வானை இடம் பெறவில்லை. உயர்கல்விக்கு தடையின்றி இடம் கிடைக்க வியாழனன்று இவருக்கு பூஜை செய்கின்றனர்.தலச் சிறப்புநடராஜர் பிரம தாண்டவக் கோலத்திலும், எதிரில் துர்வாசர் கைகூப்பிய நிலையிலும் உள்ளனர். முதல் கும்பாபிஷேகத்தை துர்வாசர் நடத்தியுள்ளார். பராசரர், காலவ முனிவர் ஆகியோர் பாரிஜாதவனேஸ்வரரை வழிபட்டு நற்கதி அடைந்தனர். தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் இது 105வதாகும். இங்கு திருப்பணி செய்த கோவிலுார் மடாதிபதி வீரசேகர ஞான தேசிக சுவாமியின் அதிஷ்டானம் (சமாதி), கோவில் அருகில் உள்ளது. இவர் 'திருக்களர் ஆண்டவன்' எனப்படுகிறார்.திருவிழாசித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் திருவிழா, வைகாசி விசாகம், நவராத்திரி, கந்த சஷ்டி, ஆருத்ரா தரிசனம், மார்கழி சஷ்டி திதி, சதய நட்சத்திரத்தில் 'நமசிவாய' மந்திரம் உபதேசிக்கும் நிகழ்ச்சி. நேரம்: காலை 7:00 - 11:30 மணி, மாலை 6:00 - 8:30 மணி.இருப்பிடம்: மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலையில் 21 கி.மீ.,தொலைபேசி: 04367 - 279 374.