பயமின்றி வாழ...
மகாகவி பாரதியார் ஒரு அம்பிகை பக்தர் என்பதால் தன்னை 'சக்திதாசன்' என அழைத்துக் கொள்வார். அவரைப் போல பயமின்றி வாழ அம்பிகையை நாமும் வழிபடுவோம். இந்த உலகம் பராசக்தியின் கருணையால் தான் இயங்குகிறது. ஆனால் நம்மால் தான் உலகம் இயங்குவதாக நாம் நினைக்கிறோம். நான் இல்லாவிட்டால் இந்த வீடு முன்னேறுமா? இந்த தொழில் சிறக்குமா? என்ற எண்ணத்தை, சொல்லை கோபத்தின் உச்சத்தில் வெளிப்படுத்துகிறோம். ஆனால் உண்மை என்ன? யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உலகம் இயங்கும். நாம் இருக்கும் இடத்தை நம்மை விடப் பல மடங்கு கெட்டிக்காரன் ஒருவன் நிரப்புவான். காரணம்? இந்த பிரபஞ்சத்தை இயக்குபவள் பராசக்தி தானே! நாம் ஒரு கருவி மட்டுமே! இதை உணர்ந்து தினமும் காலையில் எழுந்ததும் பராசக்தியிடம் நம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.'தன்னால் எதுவும் இயலாது' என்பதை உணர யானைகளின் அரசனான கஜேந்திரனுக்கு ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டது. தன்னால் தன்னைக் காக்க முடியும் என்னும் ஆணவம் உடைந்து போகும் சூழ்நிலை உருவான பிறகே திரவுபதிக்குத் கடவுளின் சிந்தனை வந்தது. இவர்கள் இருவரையும் தினமும் காலையில் நினைக்க வேண்டும் எனப் பெரியவர்கள் சொல்வார்கள். காரணம் இவர்களைப் போல தாமதமாக கடவுளை நினைக்காமல், 'என்னிடம் ஒன்றும் இல்லை; எல்லாம் உன் செயல்' என்ற உணர்வுடன் பராசக்தியைச் சரணடைய வேண்டும்.மகாகவி பாரதியார், 'தேடி உன்னைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரியம்மா' என்கிறார். தேடி என்பது வெளியுலகில் தேடுவது அல்ல மனதிற்கு உள்ளே. அன்னை முத்துமாரியை தேசத்திற்கு உரிமையாக்கியவர் அவர். தேச முத்துமாரி என்றே அழைக்கின்றார். அவளை தேடிச் சரணடைந்து பாடி மகிழ்வோம்.எப்போதும் ஏதாவது ஒன்றை நினைத்தபடி நாம் கவலையில் மூழ்குகிறோம். பஸ் ஸ்டாப்பில் நிற்கும் போது பஸ் வரவில்லையே என்ற கவலை. பஸ் வந்தால் தாமதமாக வருகிறதே என்கிறோம். அதன்பின் முண்டியடித்து ஏறி சீட்டை பிடிக்க வேண்டுமே என்ற கவலை. உட்கார்ந்தால் இடிபடாமல் இருக்கத் தகுந்த ஆள் வர வேண்டுமே என்ற கவலை. குறித்த நிறுத்தத்திலே இறங்க வேண்டுமே என்ற கவலை... இப்படி கவலைகளை அடுக்கலாம்.காரணமின்றி கவலை கொள்வதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறோம். அது தீர என்ன செய்ய வேண்டும். பராசக்தியின் வடிவாக இருக்கும் உயிர்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவளின் திருநாமமான பராசக்தி, பராசக்தி என்று சொல்லிப் பாடினால் பயம் போகும். உன்னைச் சரணடைந்து பாடினால் குறைகள் தீரும். பக்தி பெருகும். கோடி நலம் பெருகும். எப்போதும் சந்தோஷமாக வாழலாம். இதற்கு செய்ய வேண்டிய ஒரே செயல் பராசக்தியை சரணடைதல் தான். தேடியுனை சரணடைந்தேன் தேசமுத்து மாரிகேடதனை நீக்கிடுவாய் கேட்ட வரம்; தருவாய்பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்கோடிநலஞ் செய்திடுவாய் குறைகளெல்லாம் தீர்ப்பாய்எப்பொழுதுங் கவலையிலே இணங்கி நிற்பான் பாவிஓப்பி யுனதேவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்சக்தியென்று நேரமெல்லாங் தமிழ்க்கவிதை பாடிபக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்தும் தீரும்.