நதியை நினைக்கும் நாள்
UPDATED : மார் 10, 2017 | ADDED : மார் 10, 2017
யமுனை நதியின் ஒரு கரையில் மதுராவும், மறுகரையில் ஆயர்பாடியும் இருந்தன. கண்ணன் மதுராவில் பிறந்தான். தன் குழந்தையை கம்சனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, தந்தை வசுதேவர், அவனை ஆயர்பாடியில் இருந்த நண்பர் நந்தகோபரிடம் ஒப்படைக்கச் சென்றார். யமுனை ஆற்றில் இறங்கினார். அவரது தலை மீதிருந்த கூடை வரை வெள்ளம் வந்தது. காரணம், அந்தக் கூடையில் இருந்த கண்ணனின் திருவடியை ஒரு தடவையாவது தொட்டுவிட மாட்டோமா என்று அந்த நதி நினைத்ததாம். அவ்வாறு தொட்டவுடன், மகிழ்ச்சியில் இரண்டாகப் பிளந்து வழி விட்டது. இந்த நதியின் பெருமையை அறிந்த யமுனையின் சகோதரன் எமதர்மராஜா, யமுனையை மனதால் நினைப்போருக்கு தீர்க்காயுள் உண்டாகும் என்றார். தீர்த்த திருவிழா எனப்படும் மாசிமகமான இன்று புண்ணிய நதியான யமுனையை மனதில் நினைப்போம்.