வரலட்சுமி பெயர் காரணம் என்ன?
UPDATED : ஆக 05, 2016 | ADDED : ஆக 05, 2016
சவுராஷ்டிர நாட்டின் ராணியான சுசந்திராவிடம் ஏராளமான பணம் இருந்தது. இது தந்த அகங்காரத்தால், மகாலட்சுமியை விட தானே பெரியவள் என பேசி வந்தாள். அத்துடன் அடாத செயல்களையும் செய்தாள். பணம் என்பது நற்காரியங்களுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அவளுக்கு உணர்த்த விரும்பிய லட்சுமி, அவளிடமிருந்த செல்வத்தைப் பறித்து ஒரே நாளில் ஏழையாக்கி விட்டாள். சுசந்திராவின் மகள் சாருமதி, லட்சுமி தாயாரிடம் மன்னிப்பு கேட்டு விரதம் அனுஷ்டித்தாள். கருணைக்கடலான மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள். சுசந்திராவும் தன் மகளைப் பின்பற்றி லட்சுமி விரதம் கடைபிடித்து, இழந்ததை மீண்டும் பெற்றாள். இழந்ததைப் பெற வரம் அருளியதால் மகாலட்சுமிக்கு 'வரலட்சுமி' என்று பெயர் ஏற்பட்டது.