நீரே பக்தியில் பெரியவர்
UPDATED : டிச 17, 2021 | ADDED : டிச 17, 2021
ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்த பெரியாழ்வார் மதுரை பாண்டிய மன்னரின் முன்னிலையில் நடந்த போட்டியில் பங்கேற்றார். ஸ்ரீமந்நாராயணரே (பெருமாள்) பரம்பொருள் என்னும் உண்மையை நிரூபித்தார். பெரியாழ்வாருக்காக பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்தார். இந்தக் காட்சியை அங்கு திரண்டிருந்த பாண்டிய நாட்டு மக்களும் தரிசித்தனர். மக்களின் கண் பட்டு பெருமாளுக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்குமோ, அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என பெரியாழ்வார் பயந்து 'திருப்பல்லாண்டு' பாடினார். இந்த உயர்ந்த பக்தியை மெச்சிய பெருமாள், 'நீரே பக்தியில் பெரியவர்' என வாழ்த்தினார். அதுவரையில் விஷ்ணு சித்தர் என்று அழைக்கப்பட்ட அவர், 'பெரியாழ்வார்' என பெயர் பெற்றார். அவர் பாடிய திருப்பல்லாண்டுப் பாடலே உலகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் தினமும் காலையில் பாடப்படுகிறது.