அம்பிகையைப் போற்றுங்கள்
* அம்பிகையே! பராசக்தித்தாயே! எண்ணிய எண்ணங்கள் யாவும் நல்லமுறையில் நிறைவேற வேண்டும். திடமான நெஞ்சம் வேண்டும். தெளிவான நல்லறிவு வேண்டும். செய்த பாவங்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்தோட வேண்டும். * படைத்தல், காத்தல், மறைத்தல் என்னும் முத்தொழில்களைப் புரிபவளே! கனியில் சுவையும், காற்றில் இயக்கமும் கலந்தது போல, உலகில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் கலந்தவளே! உலகம் அனைத்தும் உனது அருளே வியாபித்திருக்கிறது. உனது திருப்பாதங்களைப் போற்றுகின்றேன். * அமுதம்போன்றவளே! புதுமைக்குப் புதுமையாய், பழமைக்குப் பழமையாய், உயிருக்குள் உயிராக, என்னுள்ளே நானாகவும், நான் என்பதை உணர்ந்தபின் தானாகவும் நின்று வழிகாட்டுபவளே! உன்னைச் சரணடைகின்றேன். * கவலை என்னும் நோய் தீர்க்கும் மருந்தானவளே! உலகைக் கட்டியுள்ள பேரிருள் நீக்கும் பேரொளிச் சுடரே! யோகியரின் மனதில் இருப்பவளே! தாயே! உன்னை வணங்குகிறேன். -பாரதியார்