| ADDED : மே 18, 2024 01:04 AM
கோவை;உக்கடம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில், வளர்ந்திருந்த மரங்கள் அகற்றப்பட்டன.கோவை, உக்கடம் வின்சென்ட் ரோட்டில், வீட்டு வசதி வாரியம், 352 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் கட்டி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்படைத்துள்ளது.கட்டடத்தின் மேல் தளத்தில் சின்டெக்ஸ் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. கட்டடம் முறையாக பராமரிக்கப்படாததால், மேல்தளம், பக்கவாட்டு சுவரில் மரங்கள் வளர்ந்து கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல், சுவரில் ஈரப்பதம், கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிவது என, விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் காணப்படுகின்றன.குடியிருப்போர் நலச்சங்கம் தரப்பில் மாதம் தோறும் ரூ.150 பராமரிப்பு தொகை வசூலிக்கப்பட்டும், முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதாக அங்கு வசிப்பவர்கள் புலம்புகின்றனர். மேலும், கழிவுநீர் தொட்டி நிரம்பி துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, நமது நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.இதையடுத்து, ஆபத்து விளைவிக்கும் வகையில் வளர்ந்திருந்த மரங்கள் முதற்கட்டமாக அகற்றப்பட்டுள்ளன. கட்டடத்தை பராமரிக்க ரூ.1.25 கோடி அரசிடம் இருந்து நிதி வந்தவுடன், உடைந்த குழாய்களை மாற்றி தண்ணீர் கசிவை சரி செய்தல், தொட்டியை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.