உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி பேச்சு நொய்யலை பாதுகாப்பது மிக முக்கியம் 2 மாவட்ட அதிகாரிகள் கைகோர்க்கணும்!

தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி பேச்சு நொய்யலை பாதுகாப்பது மிக முக்கியம் 2 மாவட்ட அதிகாரிகள் கைகோர்க்கணும்!

திருப்பூர்:கோவை, திருப்பூர் ஆகிய மாவட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் இணைந்த குழு கூட்டம் நடத்தி, மாசுபட்டுள்ள நொய்யலை மீட்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், சப்-கலெக்டர் சவுமியா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு செயலாளர் குமார்:அவிநாசி சுற்றுப்பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செடிகளை, காட்டுப்பன்றிகளும், மயிலும் சேதப்படுத்துகின்றன. கானுார், குட்டகம், போத்தம்பாளையம் பகுதி விவசாயிகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்வதற்கும், மயில்களை அப்புறப்படுத்தவும் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம்:நொய்யலாற்றில் ஆங்காங்கே, சுத்திகரிக்காத சாயக்கழிவுநீர் கலந்து மாசுபடுத்துகிறது. நுரை பொங்க தண்ணீர் செல்வது குறித்து 'தினமலரில்' செய்தி வெளியாகியுள்ளது. கோவையிலிருந்து வரும்போதே நொய்யல் மாசுபட்டு விடுகிறது. கோவை, திருப்பூர் மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும் துாங்கிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை தட்டியெழுப்பவேண்டும்.கோவை, திருப்பூர் கலெக்டர்கள், வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என இரண்டு மாவட்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்று நொய்யலாறு மாசுபடுவதை தடுப்பதற்கான ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இதனையடுத்து பேசிய சப்-கலெக்டர், 'இது குறித்து கலெக்டரிடம் பேசி, கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்,' என்று பதிலளித்தார்.

பதில்சொல்ல

யாரும் இல்லை!லோக்சபா தேர்தல் காரணமாக, திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தல் முடிந்த பின், ஜமாபந்தி நடைபெற்றதால், ஜூனில், குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. அதன்பின், நேற்று நான்கு மாத இடைவெளிக்குப் பின், நடத்தப்பட்டதாலோ அல்லது விவசாயிகளின் கேள்வி கணைகளை எதிர்கொள்ள தயங்கியோ என்னவோ, நேற்றைய கூட்டத்தில், அதிகாரிகள் பலர் பங்கேற்கவில்லை. குறிப்பாக வனத்துறை, மின்வாரியம், மாசுகட்டுப்பாடு வாரியம் (தெற்கு) சார்ந்த அதிகாரிகள் இல்லை. அடுத்த கூட்டத்தில், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்க சப்-கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, விவசாயிகள் ஒருமித்தகுரலில் கோரிக்கை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை