| ADDED : மே 03, 2024 11:36 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே ஆத்துார் ஊராட்சி பகுதியில், சவுக்கு மரத்தால் ஆன மின்கம்பம் அகற்றப்பட்டு, புதிய சிமென்ட் மின்கம்பம் நடப்பட்டது.ஆத்துார் பகுதியில், ஆழ்துளை கிணறு மற்றும் கிணற்று பாசனத்தின் வாயிலாக, நெல், கரும்பு, மணிலா மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவை விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன.இப்பகுதியில், கடந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக, விவசாய நிலங்கள் வழியே மின்சாரம் செல்லும் மின் கம்பம் ஒன்று முறிந்து விழுந்தது.அது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும், புதிதாக மின் கம்பம் மாற்றி அமைக்காமல், கிடப்பில் போடப்பட்டது.தொடர்ச்சியான புகார்களால், தற்காலிகமாக சவுக்கு மரத்தால் கம்பம் ஏற்படுத்தி மின் இணைப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில், செய்தி வெளியானது. அதன் விளைவாக, சவுக்கு மரத்தால் அமைக்கப்பட்ட மின் கம்பம் அகற்றப்பட்டு, புதிதாக சிமென்ட் மின் கம்பம் நடப்பட்டு, மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.