திருப்பூர் : மண் கடத்தல் லாரி மீது, நடவடிக்கை எடுக்க முயன்ற, ஆர்.ஐ., பணியிட மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில், பின்னணியில் அமைச்சர் பி.ஏ., இருப்பதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதனால், சம்பந்தப்பட்ட பி.ஏ., அவிநாசிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை சிறப்பு ஆர்.ஐ., சிவசக்தி, கடந்த பிப்., 28ல் தாராபுரம் அருகே இடையன்கிணறு கிராமத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தார். மண் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்து, பறிமுதல் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த ஆளும்கட்சி நிர்வாகி வாகனத்தை விடுவிக்குமாறு அதிகாரியை மிரட்டினார். அதிகாரி மறுத்தார். அடுத்ததாக அமைச்சர் ஒருவரின் உதவியாளர், ஆர்.ஐ., மொபைல் போனுக்கு பேசி வாகனத்தை விடுவிக்குமாறு கூறி மிரட்டினார். அவரும் லாரியை விடுவித்தார்.அதன்பின், 5ம் தேதி ஆர்.ஐ., சிவசக்தி பல்லடத்துக்கு மாற்றப்பட்டார். இவ்விஷயத்தில் மாவட்ட அதிகாரிகள் மவுனம் காத்தனர். இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. அதனடிப்படையில், அமைச்சர் பி.ஏ., வினோத், அவிநாசி தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடத்துக்கு முன் தேதியிட்டு இடமாற்றம் செய்து, திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார். மீண்டும் சிவசக்தி
மண் கடத்தல் லாரி மீது நடவடிக்கை எடுத்த கனிமவளத்துறை சிறப்பு ஆர்.ஐ., சிவசக்தி, ஆளுங்கட்சியினர், அமைச்சர் பி.ஏ.,வின் அழுத்தம் காரணமாக, பல்லடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவ்விவகாரம் அம்பலமானதை தொடர்ந்து, பல்லடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்த ஆர்.ஐ., சிவசக்தியை பழைய இடத்திலேயே, அதாவது கனிமவளத்துறையிலேயே பணியினைத் தொடருமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக அரசுக்கு பாராட்டு
அமைச்சர் ஒருவரின் பி.ஏ., மண் கடத்தல் விவகாரத்தில் உடந்தையாக இருப்பதாகவும், நேர்மையாக பணியாற்றிய ஆர்.ஐ.,யை மிரட்டியதாக 'தினமலர்' நாளிதழ் செய்தி வெளியிட்டது. இது, அரசின் கவனத்துக்கு சென்றவுடன், சம்பந்தப்பட்ட பி.ஏ., மீது உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அவரை இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தது. இந்த அதிரடி நடவடிக்கைக்கு, விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என, பலரும் தமிழக அரசை பாராட்டி வருகின்றனர்.