டவுட் தனபாலு
பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: துாத்துக்குடியில் அருணாச்சலம் என்ற வாலிபரை, அவரது தாய் கண் முன்னே, காவல் துறையினர் அடித்து கொடுமைப்படுத்தி கொலை செய்துள்ளனர். விசில் சின்னத்திற்கு ஓட்டு போட்டதற்கான பலனை, மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த கால ஆட்சிகளுக்கும், இந்த ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. டவுட் தனபாலு: விசில் சின்னத்துக்கு மக்கள் ஓட்டு போட்டதால் தான், வாலிபரை போலீசார் அடிச்சு கொன்னுட்ட மாதிரி சொல்றீங்களே... இந்த மாதிரி போலீசாரை எல்லாம், உடனுக்குடன் பணிநீக்கம் செய்தால் மட்டுமே, இது போன்ற கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதில், 'டவுட்'டே இல்லை! வி.சி.க.,வைச் சேர்ந்த, தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு: பா.ஜ.,விற்கு எதிரானவர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்ற எண்ணத்தில் தான், கடந்த காலங்களில் தி.மு.க.,வுடன் இணைந்து செயல்பட்டோம். இப்போதும், பா.ஜ., எதிர்ப்பு என்ற புள்ளியில் தான் த.வெ.க.,வுடன் சேர்ந்து செயல்படுகிறோம். தி.மு.க.,வும், பா.ஜ.,வும் கூட்டணி சேரும் என சொல்லப்படுவதை, தி.மு.க.,விற்கு எதிரான அவதுாறாகவே பார்க்கிறோம். தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி என்பது, தி.மு.க.,வில் இருக்கும் சிலரின் விருப்பமாகக் கூட இருக்கலாம். டவுட் தனபாலு: தி.மு.க.,வினர், மத்திய அமைச்சர் பதவிகளை அனுபவித்து, 12 வருஷங்களாகிடுச்சு... இப்ப, மாநிலத்திலும் அதிகாரம் இல்லாம இருக்காங்க... அதனால, பா.ஜ., கூட்டணியில் சேர்ந்து, மத்திய அமைச்சர்களாக பார்க்கிறாங்க என்ற, 'டவுட்' இவருக்கு வந்துடுச்சோ? பத்திரிகை செய்தி: த.வெ.க., கூட்டணியில் இணைந்த பின்பும், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவையும், தன்னையும், த.வெ.க., பரப்புரை செயலர் நாஞ்சில் சம்பத், மிகக் கடுமையாக விமர்சிப்பதாக, த.வெ.க., தலைமையிடம் ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ புகார் அளித்துள்ளார். டவுட் தனபாலு: 'வைகோ அடிக்கடி கூட்டணி மாறுகிறார்'னு, விமர்சிக்கும் நாஞ்சில் சம்பத் மட்டும் கொள்கைவாதியா...? தி.மு.க.,வில் இருந்து ம.தி.மு.க.,வுக்கு போனவர், 'இன்னோவா' காருக்காக அ.தி.மு.க.,வுக்கு தாவினார்... அங்கிருந்து அ.ம.மு.க., அப்புறமா தி.மு.க., ஆதரவுன்னு பல்டி அடிச்சவர், கடைசியா த.வெ.க.,வில் சங்கமிச்சிருக்காரு... அவரது விமர்சனங்களை எல்லாம் துரை வைகோ பெருசா எடுத்துக்கணுமா என்ற, 'டவுட்' தான் வருது!