மூன்று ஆண்டுகளாக உரிய சான்று பெறாமல் இயங்கும் 11 புதிய அரசு மருத்துவமனைகள்
விருதுநகர்: தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட, 11 அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளுக்கு, மாசுகட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித் துறை, தீயணைப்புத் துறை, நகராட்சி, மாநகராட்சியின் தடையில்லா சான்றிதழ்கள் பெறப்படாமல் மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், அரியலுார், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவ கல்லுாரி, மருத்துவமனைகள் 2022 ஜன., 12 முதல் செயல்படுகின்றன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ouxte1r0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கட்டுமான பணிகள் துவங்க, மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ், பணிகள் முடிவடைந்த பின் பொதுப்பணித்துறை ஆய்வு செய்து முழுமை பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.அதே போல, தீத்தடுப்பு வசதிகள், தீயணைப்பு வாகனங்களின் மீட்பு பணிகளுக்கு தேவையான இடவசதிகள் வளாகத்தில் இருப்பதை ஆய்வு செய்த தடையில்லா சான்றிதழ், நகராட்சி, மாநகராட்சியால் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேறப்படுவதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.இதில், அரசு மருத்துவ கல்லுாரிகளில் கட்டுமான பணிகளை செய்த நிறுவனம், முறையாக பணிகளை முடித்ததால் அனைத்து சான்றிதழ்களும் வழங்கப்பட்டு விட்டன. ஆனால், மருத்துவமனைகளில் கட்டுமான பணிகளை செய்த ஒப்பந்த நிறுவனம், பணிகளை முறையாக முடிக்கவில்லை. இருப்பினும், 11 அரசு மருத்துவமனைகளும் அவசர கதியில் திறக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.இந்த மருத்துவமனை கட்டடங்களை பொதுப்பணித் துறை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கவில்லை. தீயணைப்பு, நகராட்சி, மாநகராட்சியால் வழங்கப்படும் எவ்வித சான்றிதழ்களும் இல்லாமல் மூன்று ஆண்டுகளாக 11 புதிய அரசு மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன.தேசிய மருத்துவ ஆணையம் பல்வேறு ஆவணங்களை கேட்ட போது தான், இந்த சான்றிதழ்கள் எதுவுமே பெறாதது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகங்கள் சார்பில், தற்போது அந்தந்த துறைகளில் தடையில்லா சான்றிதழ்கள் பெறும் முயற்சி நடந்து வருகிறது.