UPDATED : செப் 21, 2024 09:43 AM | ADDED : செப் 21, 2024 05:57 AM
கோவை: ''நம் மனதை நிலையாக வைத்துக்கொண்டால், நம்மை அறியாமலேயே நிம்மதி பிறக்கும்,'' என்று ஸ்ரீ ரமண சரணதீர்த்தர் நொச்சூர் சுவாமிகள் கூறினார். அவர் ராம்நகர் கோதண்ட ராமர் கோவிலில், நேற்று நிர்வாண ராமாயணம் குறித்து சொற்பொழிவாற்றியதாவது:மனிதர்களில் பெரும்பான்மையானவர்கள் தேடுவது நிம்மதியைத்தான். அந்த நிம்மதி எங்கு இருக்கிறது, எப்படி இருக்கிறது, எப்போது கிடைக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் கேள்வியும்.அதைத்தேடித்தான் மிகப்பெரிய அரசரான கவுதமபுத்தரே சென்றார். மனித வாழ்வில் நிறைய துன்பங்கள் உள்ளன. எதையும் அதிகமாக, ஆழமாக யோசிக்க வேண்டாம். அது மேலும் துன்பத்தை ஏற்படுத்தும். பகவன் நாமாவை தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தால், நமக்கு ஏற்படும் எண்ண அலைகள் நம் மனதில் தடுத்து நிறுத்தப்படும். அப்போது மனம் சாந்த சொரூபமாகி, அலை பாயாமல் ஒருநிலைக்கு வந்துவிடும். ஜெபம் தான் மிக முக்கியம். அதன் வாயிலாக ஏகாந்தத்தை அடைந்து, தியானநிலைக்கு செல்லலாம்.ஆசைக்கு அடிமைப்பட்டு விட்டால், அதற்கு மனது அடிமையாகிவிடும். இப்படி அடிமையான பலர் லட்சாதிபதியாக இருந்து பிச்சைக்காரனாக மாறியுள்ளனர்.மனதை நிலையாக வைத்துக் கொண்டால், நம்மை அறியாமல் நம் மனதில் நிம்மதி பிறக்கும். நம் மரணத்துக்கு முன்பு மனதில் இருக்கும் ஆசை, பற்றுஆகிய அனைத்தையும் விட்டுவிட வேண்டும். அப்போது நம்முடைய மரணம், வேதனையானதாக இருக்காது.இவ்வாறு, நொச்சூர் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்தினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் பிரசாதமும், குடிநீரும் வழங்கப்பட்டது.