உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / திருமாவளவன் தலித் இல்லை!

திருமாவளவன் தலித் இல்லை!

கு.காந்திராஜா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்ற வி.சி., தலைவர் திருமாவளவனிடம், ஒரு தம்பதி, 'செல்பி' எடுக்க கேட்டபோது, தன் நெற்றியிலிருந்த திருநீறை அழித்து, புகைப்படம் எடுத்துள்ளார். அவரது இச்செயல், ஹிந்து மக்களிடம் பெரிதாக எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. ஏனெனில், அவர் உண்மையில் ஹிந்து அல்ல; பட்டியலின மக்களுக்கு கிடைக்கும் சலுகைகளுக்காகவும், ரிசர்வ் தொகுதியில் போட்டியிடுவதற்காகவும் தான் ஹிந்துவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் திருநீறு அணிந்தது, அரசியல் சட்டம் அளிக்கிற தலித் சமூகத்திற்குரிய சலுகைகளை அனுபவிக்க; அதை அழித்தது, இஸ்லாமியர்களை, கிறித்துவர்களை தாஜா செய்ய!மொத்தத்தில் அவர் ஒரு வேஷதாரி; இடத்திற்கேற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி!தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எத்தனையோ கொடுமைகள் அரங்கேறுகின்றன. அவற்றில் ஒன்று தான், வேங்கை வயல் சம்பவம். அத்துடன், இம்மக்கள் உள்ளாட்சி தலைவர்களாக இருக்கும் பல கிராமங்களில், இன்றும் கூட சுதந்திரம் மற்றும் குடியரசு தினங்களில் தேசியக் கொடி ஏற்ற அனுமதிக்கப்படுவதில்லை. தன்னை தலித் தலைவர் என்று அழைத்துக்கொள்ளும் திருமாவளவன், இதுபோன்ற சம்பவங்களை கண்டித்து எந்த போராட்டமும் நடத்தியதில்லை. மேலும், அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக, எந்த ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஈடுபட்டதும் இல்லை.ஆனால், எங்கோ ஒரு நாட்டில் இஸ்லாமியரோ, கிறிஸ்துவர்களோ பாதிக்கப்பட்டால், இங்கு போராட்டம் நடத்துவார். காரணம், திருமா பட்டியலின மக்களுக்கான தலைவர் இல்லை. இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கிறிஸ்துவ மிஷினரிகளின் ஏஜென்ட்!அப்பாவி தலித் மக்களிடம் ஹிந்து மதம் குறித்து பொய்ப்பிரசாரங்கள் செய்து, அவர்களை மதம் மாற்றுவதுதான் இவரது பணி. அதைத்தான் திருப்பரங்குன்றத்திலும் செய்திருக்கிறார். அதனால், அவர் திருநீறை அழித்ததில் அதிர்ச்சி அடைய எதுவுமில்லை!

ஆளுங்கட்சி ஆணையர்களால் நீதி கிடைக்குமா?

கோ.பாண்டியன், செங்கல் பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், மாநில தகவல் ஆணையர்களாக இருவரை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார், தமிழக கவர்னர். அதில் ஒருவர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., மகன்; மற்றொருவர் கர்நாடக நீதிமன்றங்களில் தி.மு.க., வழக்குகளுக்காக ஆஜராகும் வழக்கறிஞர். தங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வோரையே தகவல் ஆணையர் நியமனத்திற்கு பரிந்துரை செய்கின்றனர் ஆட்சியாளர்கள். இதனால், பொதுமக்களுக்கு அலுவலர்கள் சரியாக தகவல்களை வழங்குவதில்லை. இதன்காரணமாக, முதல் மேல் முறையீடு, இரண்டாம் மேல் முறையீடு என, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.மாநில தகவல் ஆணையத்திற்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மேல் முறையீட்டு மனுக்கள் வருகின்றன. இம்மனுக்கள் மீது வரிசைப்படி விசாரணை மேற்கொள்ள, ஓரிரு ஆண்டுகள் ஆகின்றன.அவ்வாறு காலம் தாழ்த்தி விசாரிக்கப்பட்டாலும், முடிவுகள் பெரும்பாலும் அரசு அதிகாரிகளுக்கு சாதகமாகவே முடித்து வைக்கப்படுகின்றன.இதனால், தகவல் ஆணையத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போய்விடுகிறது.தகவல் ஆணையத்தில் தற்போது, ஓய்வு பெற்ற உயர் காவல் துறை அதிகாரிகள் இருவர், இந்திய நிறுவன சட்ட சேவையான ஐ.சி.எல்.எஸ்., அதிகாரி ஒருவர், மூன்று வழக்கறிஞர்கள் மற்றும் ஒரு பேராசிரியர் உள்ளனர். இவர்களில் பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க கூடிய நீதித் துறையை சேர்ந்தவர்கள் எவரும் இல்லை. மேலும், வழக்கறிஞர்களை ஆணையர்களாக நியமிப்பதால், அவர்கள் தங்கள் கட்சிக்காரர்களின் வெற்றிக்காக வாதாடுவார்களே அன்றி, நீதிக்காக வாதாட மாட்டார்கள். எனவே, மாநில தகவல் ஆணையத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் பணியில் உள்ள நீதிபதிகளை நியமித்தால் தான் பாரபட்சமற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்!

ஆக்கிரமிப்புக்கு அரசு கொடுக்கும் பரிசு!

ஆர்.கிருஷ்ணசாமி, புதுச்சேரி யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளோரை தயவு தாட்சண்யம் பாராமல் வெளியேற்ற நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.அதன்படி, அதிகாரிகள் அகற்றி கொண்டிருந்த போதே, அரசு ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் கொடுத்து மகிழ்வித்தது. பொதுவாகவே, புறம்போக்கு நிலமோ, நீர்நிலைகளோ நாலு ஆணிகள் மற்றும் ஒரு கோணியைக் கொண்டு ஆக்கிரமித்து விட்டால், என்றாவது ஒருநாள் அந்த ஆக்கிரமிப்பாளர்களை அரசு அரவணைத்து, குடியிருப்புக்களை கட்டிக் கொடுத்து விடுவது தமிழகத்தில் தொன்று தொட்டு வரும் நடைமுறையாகவே உள்ளது. இந்நிலையில், 'தமிழகம் முழுதும் அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆஜராக நேரிடும்' என உயர் நீதிமன்றம் எச்சரித்து உள்ளது.இப்படி கொடிக்கம்பங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுக் கொண்டிருக்க, சந்தடியில்லாமல், சென்னையில் நீண்ட காலமாக அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து வசிப்போருக்கு, 3.90 லட்சம் சதுர அடி நிலத்திற்கு வீட்டு மனை பட்டா வழங்க சென்னை பெருநகர மாநகராட்சி தடையின்மை சான்று வழங்கி, ஆக்கிரமிப்புக்கு பச்சைக் கொடி காட்டிஉள்ளது.நீதிமன்ற உத்தரவையும், மாநகராட்சியின் அனுமதியையும் நினைத்தால் அழுவதா, சிரிப்பதா என புரியவில்லை.இங்கு, ஆக்கிரமிப்பாளர்கள் மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். ஆனால், சட்ட திட்டங்களை மதித்து, தொழில், வருமான வரி, தண்ணீர், மின்கட்டணம், வீட்டு வரி உட்பட அனைத்தையும் முறையாக செலுத்துவோர் நசுக்கப்படுகின்றனர். காரணம், ஆக்கிரமிப்பாளர்கள், தேர்தலின் போது கண்களை இறுக மூடிக்கொண்டு, ஆளுங்கட்சிக்கு ஓட்டளிப்பர்.நடுத்தர வர்க்கத்தினரோ ஓட்டுப்பதிவு நாளன்று ஓட்டுச்சாவடி பக்கம் தலையை காட்டமாட்டார் கள். அதனால் தான் முன்னவருக்கு பரிசு; பின்னவர்களுக்கு அபராதம்!போகிற போக்கைப் பார்த்தால், போர் நினைவுச் சின்னம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, ஓமந்துாரார் அரசினர் தோட்டம், ரிப்பன் மாளிகை, எழிலகம், குறளகம் போன்ற இடங்களிலும் ஆக்கிரமிப்பாளர்கள் அத்துமீறி குடியேறினால், அவற்றையும் அவர்களுக்கே பட்டா போட்டு கொடுப்பர் போலும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை