முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: துாத்துக்குடி
துப்பாக்கி சூடு சம்பவம், முதல்வராக இருந்த பழனிசாமிக்கு தெரிந்தே நடந்தது
என, அருணா ஜெகதீசன் அறிக்கை தெளிவுபடுத்தியது; அவர் மீது இன்று வரை
நடவடிக்கை இல்லை. இப்போது, சம்பவத்துக்கு காரணமான போலீஸ் அதிகாரிகளுக்கு
இந்த ஆட்சி பதவி உயர்வு தருகிறது என்றால், தி.மு.க.,வுக்கும்,
பழனிசாமிக்குமான நெருக்கத்துக்கு, இதை விட வேறென்ன சாட்சி வேண்டும்.ஆட்சி மாறும் போது, அணி மாறும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைப்பதெல்லாம் வழக்கம் தானே!தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை: ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு பலமுறை பொது மக்கள் கோரிக்கை விடுத்தும், இதுவரை, டி.என்.பி.எஸ்.சி., எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே சமயம், தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம், வரும் 7ம் தேதி நடத்த இருந்த பட்ட தாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை, தென் மாவட்ட வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது; பொறியாளர் தேர்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டும்.எந்த சர்ச்சையும் இல்லாம, அரசு பணி நியமனங்கள் நடக்கணும்னு ஆரம்பிக்கப்பட்ட அரசு பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்குதுவது சரியா படலை!கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்நல்லசாமி பேட்டி: நாட்டில் குஜராத், பீஹார், நாகலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் மது விலக்கு உள்ளது. அதில், மணிப்பூர் மாநிலத்தில் வருவாயை முன்னிறுத்தியும், கள்ளச்சாராய பெருக்கத்தை காரணம் காட்டியும், பா.ஜ., அரசு மதுவிலக்கை ரத்து செய்துள்ளது; இந்த அறிவிப்பு வேதனை அளிக்கிறது.கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், உடனடி வளர்ச்சிக்கு வருவாய் ஈட்ட ஒரே வழி மது விற்பது மட்டும் தான்னு, நம்ம ஊர் அரசியல்வாதிகள் ஆலோசனை வழங்கி இருப்பாங்களோ?ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றை, பெயர் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அனைத்து திட்டங்களுக்கும் தேசத்தின் பெயரை அடிப்படையாக வைத்து செயல்படுவது தேசிய மாடல். தமிழக மக்கள் வரிப்பணத்தில் அமல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுக்கும், கருணாநிதி பெயர் வைப்பது திராவிட மாடல்.எது, எப்படியோ... ஆட்சியா ளர்கள் மாடல், மாடலா மக்களை முட்டாள் ஆக்காம இருந்தா சரி!