திருக்குறளின், 1,330 திருக்குறளுக்கும் தனித்தனி ஓவியங்கள் படைத்து வருவது பற்றி, புதுச்சேரியைச் சேர்ந்த சவுமியா இயல்: திருக்குறளுக்கு ஓவியங்கள் வரையும் முயற்சியைத் துவங்கி, நாள்தோறும் ஒரு திருக்குறளுக்காவது, ஒரு ஓவியமாவது வரைவது என, முடிவு செய்து, இன்று வரை, 470 குறள்களுக்கு மேல் ஓவியங்கள் வரைந்திருக்கிறேன். ஒரு நாளைக்கு, ஒரு குறள் வீதம், தொடர்ந்து, 1,330 நாட்களில், 1,330 குறளுக்கும் ஓவியங்கள் வரைய துவங்கியுள்ளேன்.தினமும் ஒரு குறளைப் படித்து, பல்வேறு சான்றோர்களின் குறள் விளக்கங்களையும் படித்து, உணர்ந்து, ஒவ்வொரு குறளிலும் இருக்கும், அதன் சாராம்சத்தை எடுத்துரைக்கும் விதத்தில், சில டெக்னிக்கல் ஓவியக் கோட்பாடுகளோடு வரைய முயற்சிக்கிறேன்.குறளோவியங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிய பின், இதைக் கண்காட்சியாகவும், புத்தகமாகவும் வெளியிடும் எண்ணம் இருக்கிறது.சில குறள்களுக்கு, ஓவியங்களை வரைய, பல மணி நேரம் ஆகும். தினசரி வேலைகளோடு, இந்த முயற்சியை மேற்கொள்வது மிகவும் கடினம் என்றாலும், என் அம்மா மற்றும் மகளின் ஒத்துழைப்போடு, இந்த அழகான பயணத்தை மேற்கொண்டு வருகிறேன்.ஆத்மார்த்தமான இந்த முயற்சியின் மூலம், திருக்குறளின் அற்புதக் கருத்துகளையும், வள்ளுவப் பெருந்தகையின் வரலாற்றைப் பற்றியும், கற்றறியும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டிருக்கிறேன்.இந்த முயற்சியை ஆரம்பித்த, முதல் நாளிலிருந்து, இந்த பிரமிப்பு குறையவே இல்லை.மேலும், மெருகேற்றும் விதமாக, நம் மண்ணின் விழுமியங்களைப் பறைசாற்றும் சிற்பங்கள், குகை ஓவியங்கள், சுவர் ஓவியங்கள், திருச்செந்துார், சித்தன்னவாசல் போன்ற இடங்களுக்கு பயணித்து, அன்றைக்கான திருக்குறளை, வரைய முற்படுகிறேன்.சங்ககால தமிழர் வாழ்வியல் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொண்டிருக்கிறேன்.கதைகளுக்கும், கவிதைகளுக்கும் ஓவியம் வரைவதும், வார்த்தைகளை ஓவியங்களாக மாற்றுவதும் மட்டுமல்லாது, இது சம்பந்தமான ஆய்வுகளையும் மேற் கொண்டிருக்கிறேன். குறள், ஒன்றே முக்கால் அடி; ஆனால் சொல்லும் கருத்துகள் ஏராளம். முடிந்தவரை எல்லா கருத்துகளையும், சாதாரண நீள, அகலம் கொண்ட தாளில் வரைவது, எனக்குப் பெரிய சவால் தான்.திருக்குறளை ஓவியங்களாக வடிவமைப்பதை விட, படக்கதை புத்தகங்களாக வடிவமைக்கவும் முயற்சி செய்கிறேன்.நம்ம இலக்கியங்களை ஓவியமா வரையணும்னு முடிவெடுத்ததுமே, முதலில் எனக்கு வரையணும்னு தோன்றியது, திருக்குறள் தான்.வள்ளுவரோட கருத்துகள், அவரோட சமூகப் பார்வை, அவரோட எண்ண ஓட்டம்னு அவருடனேயே பயணம் பண்ற மாதிரி, ஓர் அனுபவம் கிடைக்கிறது!