சேதமான உயரழுத்த மின்கம்பம்
நெல்வாய்பாளையத்தில் அபாயம்
பவுஞ்சூர் அடுத்த நெல்வாய்பாளையம் சாலை சந்திப்பில் இருந்து, ஆக்கினாம்பட்டு கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் உயர் அழுத்த மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.அந்த கம்பத்தின் நடுவே, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் துருப்பிடித்து உள்ளதால், பலத்த காற்று வீசினால் உயர் அழுத்த மின் கம்பம் சாலையில் முறிந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள மின் கம்பத்தை உடனே மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - ச.விக்னேஷ், பவுஞ்சூர்.
சாலை வளைவில் ஜல்லிக்கற்கள்
புலியூர் சந்திப்பில் ஆபத்து
திருக்கழுக்குன்றத்திலிருந்து பட்டிக்காடு வழியில், மாமல்லபுரம் செல்லும் சாலை உள்ளது. பட்டிக்காடு, அச்சரவாக்கம், எடையூர், கடம்பாடி, மேலகுப்பம் ஆகிய பகுதிகளில் வசிப்போர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு, இச்சாலையில் செல்கின்றனர். இதில், புலியூர் சாலை இணையும் பகுதி, அபாய வளைவுடன் உள்ளது. ஓராண்டுக்கு முன், சந்திப்பு பகுதியில் சிறிய பாலம் கட்டியபோது, சந்திப்பில் ஜல்லிக்கற்கள் குவிந்து, சாலை முழுதும் சிதறின.தற்போதும் கற்கள் அகற்றப்படவில்லை. இருசக்கர வாகன டயரில், கற்கள் இடறி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கற்களை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.முனுசாமி, மாமல்லபுரம்.
சாலை நடுவே ஏற்பட்டுள்ள
பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை
சித்தாமூர் அருகே புதுப்பட்டு கிராமத்தில், சூணாம்பேடு - திண்டிவனம் செல்லும் சாலை உள்ளது. சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.தினசரி இருசக்கர வாகனம், கார் பேருந்து என, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.சாலையில் உள்ள சிறுபாலத்தின் அருகே, சாலை நடுவே பள்ளம் ஏற்பட்டு உள்ளதால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சாலை நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - க.துரை, சித்தாமூர்.
ரேஷனில் பாமாயில், பருப்பு
வினியோகிக்காததால் ஏமாற்றம்
திருப்போரூர் பேரூராட்சி, திருவஞ்சாவடி தெருவில் ரேஷன் கடை உள்ளது. இதில், 500க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். மாதந்தோறும் ரேஷனில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.ஆனால், கடந்த ஒரு மாதமாக எண்ணெய், பருப்பு மட்டும் வழங்கவில்லை. கடைக்கு சென்று கேட்கும் போதெல்லாம் இல்லை என்ற பதில் தான் வருகிறது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், எங்கள் பகுதி ரேஷன் கடையில், எண்ணெய், பருப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.ரமேஷ், திருப்போரூர்.
மழைநீர் வடிகால்வாய் சேதம்
சீனிவாசபுரத்தில் பாதிப்பு
கூடுவாஞ்சேரி சிக்னல் அடுத்த சீனிவாசபுரம் ஜி.எஸ்.டி., சாலையில், தாம்பரம் நோக்கி செல்லும் சர்வீஸ் சாலையில், மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.சர்வீஸ் சாலையில் செல்லும் அப்பகுதிவாசிகள், மழைநீர் வடிகால்வாய் மீதும் நடந்து செல்வர். தற்போது, மழைநீர் வடிகால்வாய் உடைந்து சேதமடைந்துள்ளது.இதை அறியாமல், இரவு நேரங்களில் அதன் மேல் நடந்து செல்லும் பாதசாரிகள், அடிக்கடி கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனர்.எனவே, நெடுஞ்சாலை துறையினர் சேதமான மழைநீர் வடிகால்வாயை விரைந்து சீரமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.