உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / உதயநிதியை வாழ்த்த வராத சீனியர் அமைச்சர்!

உதயநிதியை வாழ்த்த வராத சீனியர் அமைச்சர்!

“பொறுப்பேற்க வந்தவரை திருப்பி அனுப்பிட்டாரு வே...” என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.“யாரை சொல்றீங்க பா...” என கேட்டார், அன்வர்பாய்.“திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனரா இருந்தவர், ஜஹாங்கீர் பாஷா... சில மாசத்துக்கு முன்னாடி, ஊட்டி நகராட்சி கமிஷனரா, இவருக்கு, 'டிரான்ஸ்பர்' போட்டாவ வே...“போன மாசம் 9ம் தேதி, ஊட்டி தொட்டபெட்டா சந்திப்பு பகுதி யில், இவரது காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் மறிச்சு சோதனை போட்டு,11.70 லட்சம் ரூபாயை பறிமுதல் செஞ்சாவ... இது சம்பந்தமா, அவர் மேல வழக்கும் பதிவு பண்ணியிருக்காவ வே...“இதனால, கட்டாய காத்திருப்பு பட்டியல்ல வைக்கப்பட்ட ஜஹாங்கீர் பாஷாவை, சமீபத்துல, திருநெல்வேலிக்கே உதவி கமிஷனரா நியமிச்சாவ... இதுக்கு எதிர்க்கட்சிகள் எல்லாம் கடும் கண்டனம் தெரிவிச்சது வே...“இந்த சூழல்ல, ஜஹாங்கீர் பாஷா நாலு நாளைக்கு முன்னாடி, திருநெல்வேலி மாநகராட்சி ஆபீசுக்கு பொறுப்பேற்க போயிருக்காரு... ஆனா, கமிஷனர் சுகபுத்திரா, 'சென்னையில, நகராட்சி ஆணையரிடம் இருந்து ஒப்புதல் வாங்கிட்டு வந்தால் தான், 'சார்ஜ்' எடுத்துக்க முடியும்'னு சொல்லி, திருப்பி அனுப்பிட்டாரு வே...” என்றார், அண்ணாச்சி.“அரண்மனைக்குள்ள புதையல் இருக்குன்னு கிளப்பி விடுறாங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...“துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்துல, எட்டப்ப நாயக்க மன்னரின் அரண்மனை இருக்கு... அவரது வாரிசுகளுக்குள்ள ஏற்பட்ட பிரச்னையால, அரண்மனை எந்த பராமரிப்பும் இல்லாம சிதிலமடைஞ்சு கிடக்குதுங்க...“அந்த இடத்தை சீரமைத்து, சுற்றுலா தலமாக்கலாம்னு வாரிசுகள்ல ஒரு தரப்பினர் வலியுறுத்துறாங்க... இன்னொரு தரப்போ, 'அரண்மனைக்குள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள புதையல் இருக்கு... சீரமைக்கிறோம்னு சொல்லி, அதிகாரிகள் உதவியுடன் அதை எடுக்க பிளான் பண்ணி தான் இப்படி கோரிக்கை வைக்கிறாங்க'ன்னு புலம்புறாங்க...' என்றார், அந்தோணிசாமி.“துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளுக்கு வராம மூத்த அமைச்சர் புறக்கணிச்சுட்டாரு பா...” என்றார், அன்வர்பாய்.“அடடே... யார் ஓய் அது...” என கேட்டார், குப்பண்ணா.“தென் மாவட்டத்தை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருத்தர், தன் துறையில் இருக்கிற அதிகாரி ஒருத்தருக்கு, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து வழங்கணும்னு, தலைமையிடம் பரிந்துரை பண்ணியிருக்காரு பா...“இதை, ஆட்சி மேலிடம் கண்டுக்கல... இதுக்கு மத்தியில, கோட்டையில் கோலோச்சும் மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், வேறொரு பெண் அதிகாரியை அந்த பதவிக்கு பரிந்துரை பண்ணிட்டாரு பா...“இதனால, சீனியர் கடுப்பாகிட்டாராம்... 'அதிகாரிகள் பேச்சை கேட்டு ஆட்சி நடத்துனா என்ன அர்த்தம்... கட்சிக்காக கடுமையா உழைச்ச என்னை மாதிரி சீனியர்களை மதிக்காம இப்படி செய்றாங்களே'ன்னு தனக்கு நெருக்கமானவங்களிடம் புலம்பியிருக்காரு பா...“அந்த கோபத்தை வெளிக்காட்டுற விதமா தான், உதயநிதி பிறந்த நாள் விழாவுக்கு வராம, புறக்கணிச்சுட்டாரு... அன்னைக்கு, அவரது ஊர்ல நடந்த பிறந்த நாள் விழாவுல, பேருக்கு கலந்துக்கிட்டு புறப்பட்டு போயிட்டாருப்பா...” என, முடித்தார் அன்வர்பாய்.அரட்டை முடிய, வழக்கத்துக்கு மாறாக, “பெரியசாமி அண்ணாச்சி கிளம்பறேன்...” என, பெயர் சொல்லி, அந்தோணிசாமி விடைபெற, ஏதோ புரிந்தது போல மற்றவர்களும் கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V. SRINIVASAN
டிச 02, 2024 14:50

வெள்ள நிவாரண நிதி என்று ரூபாய் 6000 போன வருடம் கொடுத்தால் போல் கொடுத்து ஓட்டு வாங்கிவிடுவார்கள் மக்கள் அதற்கு என்றே காத்து இருக்கிறார்கள்


Anantharaman Srinivasan
டிச 02, 2024 13:25

கோட்டையிலே கோலோச்சும் மூத்த IAS அதிகாரி Voice எடுபடுமளவுக்கு அமைச்சர் பெரியசாமி voice எடுபடவில்லையா..? வடை போச்சே என்ற ஆத்திரம் மந்திரிக்கு.


D.Ambujavalli
டிச 02, 2024 09:59

இவர் வெளிப்படையாக புறக்கணித்தார். மீதிப்பேர் விதியே என்று வாழ்த்தினார்கள் என்ன செய்வது, கொத்தடிமை வாழ்வாச்சே


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 02, 2024 14:31

திருவெறும்பூர் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரான மகேஷ் பொய்யா மொழியை அன்றைய மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷிணி பெயர் இதுதானா, சரிவர ஞாபகம் இல்லை திருச்சி மாவட்ட திமுக அலுவலகத்துக்கே சென்று வாழ்த்து தெரிவித்தார். அதை அன்றைய திமுக தலைமை செயலாளர் இறையன்புவும் கண்டு கொள்ளவில்லை. உதயநிதிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் பிறந்த நாள் வாழ்த்துக்கூறி பிளக்ஸ் பேனரே வைக்கிறார். அந்த அளவுக்கு அதிகாரிகளின் கை திமுகவில் ஓங்கி இருக்கும்போது பாவம் இந்த பெரியசாமி என்ன செய்யமுடியும்.


Devanand Louis
டிச 02, 2024 07:29

பெஞ்ச்ல புயல் -போட்டோ ஷூட் மக்கள் விரக்தி - சென்னையில் & விழுப்புரத்தில் - முதலமைச்சர் மற்றும் துணைமுதல்மைச்சர் சுற்று வட்டார பகுதியில் வழக்கம்போல் மழைநீர் தேங்கி ஆறாக மாறியது. அரசியல்வாதிகள் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு வருகை தருமாறு, பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். வழக்கம் போல் சாப்பாடு போடுவது, மழைநீரை பார்வையிடுவது போன்ற போட்டோஷூட் ஷோவ்வை உருவாக்குகிறார்கள் .