உள்ளூர் செய்திகள்

கப்பலோட்டிய தமிழன்!

இந்திய விடுதலை பேராட்டத்தில், மெழுகுவர்த்தி போல் உருகி, வாழ்வை பெருமையாக்கிக் கொண்டவர் வ.உ.சிதம்பரனார். 'கப்பலோட்டிய தமிழன்' என, பாராட்டு பெற்றவர்.துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில், செப்., 5, 1872ல் பிறந்தார். சட்டம் பயின்று, வழக்கறிஞராகி பெயரும், புகழும் பெற்றார். சுதந்திர பேராட்ட வீரர், பால கங்காதர திலகரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு, அவரது சீடரானார். ஆங்கிலேயரிடம் நாடு அடிமைப்பட்டு தவிப்பதை கண்டு பொங்கி எழுந்தார். அன்னியத் துணி எரிப்பு உட்பட, பல போராட்டங்களை நடத்தினார். பொது கூட்டங்கள், பத்திரிகைகள் வாயிலாக, விடுதலை உணர்வை விதைத்தார். ஆங்கிலேயரின் முகத்திரையை கிழித்து எறிந்தார்.கப்பல் கம்பெனி நடத்தி, கொள்ளை லாபம் ஈட்டினர் ஆங்கிலேயர். கடல் வாணிபம், போக்குவரத்து முழுவதும் வெள்ளையர் கட்டுப்பாட்டில் இருந்தது. இதை எதிர்த்து, செயலில் இறங்கினார் வ.உ.சிதம்பரனார். சுதேசி கப்பல் கம்பெனி ஒன்றை, 1906ல் நிறுவினார். ஆங்கிலேயருக்கு போட்டியாக, துாத்துக்குடி - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தை நடத்தினார். அது, சிறப்பாக நடந்தது. இதைக்கண்டு கோபம் அடைந்த ஆங்கிலேயர், தங்கள் கப்பல்களில், பயணக் கட்டணத்தை தடாலடியாக குறைத்தனர். ஒரு கட்டத்தில், கப்பல் பயணம் இலவசம் என்றும் அறிவித்தனர். இதனால், வ.உ.சி.,யின் கப்பல் நிறுவனத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அதையும் தாங்கி, போராட்டத்தைத் தொடர்ந்தார். ஆங்கிலேய அதிகாரிகள், பல்வேறு தொல்லை கொடுத்தனர். அனைத்தையும் எதிர்த்து கடுமையாக பேராடினார்.இவரது, போராட்டத்தைக் கண்டு அஞ்சிய ஆங்கிலேயர், ஆங்கிலேய அரசுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டி, வழக்கு தொடுத்தனர். வ.உ.சி.,க்கு, ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.சிறையில் பெரும் துயர்களை அனுபவித்தார். கல் உடைக்கும் தண்டனை கிடைத்தது; மாடுகளைக் கட்டி இழுக்கும் செக்கை, இழுக்க வைத்து கொடுமைப்படுத்தினர். அதனால் தான், 'செக்கிழுத்த செம்மல்' என, அவரை போற்றுகிறோம். சிறையில் அவர் இழுத்த செக்கு, சென்னை, கிண்டியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில், இன்றும் வைக்கப்பட்டுள்ளது.எண்ணற்ற துன்பங்கள் வந்த போதும், வ.உ.சி., மனம் கலங்காது போராடினார். சிறைக் கம்பிகளுக்கு இடையேயும், தமிழுணர்வையும், தேசிய உணர்வையும் வளர்த்தார். சிறையிலிருந்து, 1912ல், விடுதலையானார். பின், சுயசரிதை உட்பட ஏராளமான புத்தகங்களை எழுதினார்.உடல் நலிவுற்ற நிலையில், ஆதரவு தர யாரும் முன் வரவில்லை. அவரது கப்பல் கம்பெனி மூடப்பட்டது. பெருமையுடன் வாழ்ந்த அவர், வறுமையின் கோரப்பிடியில் சிக்கினார். சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில், சிறுகடை நடத்தி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். வாழ்வதற்காக பெரும் சிரமங்களை சந்தித்து, 1936ல் மரணமடைந்தார். அவர் ஊட்டிய தாய்மொழிப் பற்றும், நாட்டுப் பற்றும் நிலைத்து நிற்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !