கடன்காரரும், புலவரும்!
ஒரு ஊரில் சொக்க நாதன் என்கிற புலவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகுந்த வறுமையில் வாடினார். ராஜவேலு என்ற வள்ளல் தன்னை நாடி வந்து உதவி கேட்கும் ஏழைப் புலவர்களுக்கு இல்லை என்று கூறாது வாரி வழங்குபவர். அதைக் கேள்விப்பட்டிருந்த சொக்கநாதர் ராஜவேலுவைப் பார்க்கப் புறப்பட்டார். காட்டுப் பாதையில் கொளுத்தும் வெயிலில் சொக்கநாதப் புலவர் நடந்து சென்று கொண்டிருந்தார். இளைப்பாற வேண்டி ஒரு குளத்தங்கரையில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்தார். 'ராஜவேலு இருக்கும் ஊரின் பெயர் முல்லைவனம். அது இன்னும் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று தெரியவில்லை. வழி கேட்கலாம் என்றால் வழிப்போக்கர் யாரும் கண்களில் தென்படவில்லை. இன்னும் எவ்வளவு தொலைவுதான் நடந்து போக வேண்டியிருக்குமோ' என்று தனக்குத்தானே கூறிக் கொண்டார்.அடிமரத்தில் தலையை வைத்துப் படுத்து சற்று இளைப்பாறியவர். அப்படியே உறங்கிவிட்டார்.பொழுது சாயும் வேலை. மாலைச் சூரியனின் வெயில் பட்டு அந்தக் காடே பொன் னொளி வீசியது. அப்போது அவ்வழியாக சற்று தொலை வில் ஒரு பல்லக்கு வந்தது.பல்லக்கு சுமப்பவர்கள், 'ஐலேசா' என்ற குரல் எழுப்பிய படியே பல்லக்கை தூக்கி வந்தனர். அந்த ஓசை கேட்டு சொக்கநாதப் புலவர் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தார்.பொழுது சாய்ந்து விட்ட தைக் கண்டு பதறினார்.பல்லக்கு அவர் அருகில் வந்து சேர்ந்தது. பல்லக்கின் உள்ளே அமர்ந்திருந்தவர், பல்லக்கை நிறுத்தும்படி கூறினர்.''என்ன, சொக்கநாதப் புலவரே! ஆலமரத்தடியில் அமர்ந்து காற்று வாங்கு கிறீரா?'' என்று கேட்டபடியே பல்லக்கை விட்டு வெளியே வந்தார்.''அடடா! அமுதவாணப் புலவரா? ஆமாம். காற்று தான் வாங்குகிறேன்,'' என்று தன் பிழைப்பு காற்றடிக்கிறது என்பதை சொக்கநாதப் புலவர் உட்பொருளாக வைத்துக் கூறினார்.''என்ன வறுமை இருந்தாலும், நம் திறமைக்கு வறுமை வந்து விடுமா?'' என்று சொக்கநாதப் புலவரின் திறமையைப் புகழ்ந்து குறிப்பிட்டார் அமுதவாணப் புலவர்.இருவரும் நெடுநாள் நண்பர்கள்.''என்ன சொக்கநாதப் புலவரே, எங்கே செல்வதற்கு புறப் பட்டு வந்தீர்?'' என்று அமுதவாணப் புலவர் கேட்டார்.''அமுதவாணரே! ஏதேது, பல்லக்கு சவாரி எல்லாம் செய்கிறீர். எங்கிருந்து வருகிறீர்?'' என்று கேட்டார் சொக்கநாதர்.''நானும், பல்லக்கும் இருக்கட்டும். நீர் எங்கே போகிறீர். அதைச் சொல்லும்,'' என்று கேட்டார் அமுதவாணர்.''நான் ராஜவேலு வள்ளலை பார்க்கப் புறப்பட்டேன்...'' என்றார் சொக்கநாத புலவர்.''ராஜவேலுவா? அவர் மாளிகையைச் சுற்றி ஒரே கடன் கொடுத்தவர்கள் கூட்டம்,'' என்று கூறி நிறுத்தினர் அமுதவாணர்.கடன் கொடுத்தவர் கூட்டம் என்பதைக் கேட்டதும் சொக்கநாதப் புலவருக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. 'பாவம், வள்ளல் ராஜவேலுவும் வறுமைக்கு ஆளாகிவிட்டார் போலிருக்கிறது. இனி என்ன செய்வது? எங்கே போவது? யாரிடம் போய் உதவி கோருவது?' என்று குழம்பினார்.அவர் நிலைமையைக் கண்ட அமுத வாணர், ''என்ன சொக்கநாதரே! கலங்கிப் போய் விட்டீரா? ராஜவேலு மாளிகையைச் சுற்றிக் கடன் கொடுத்தவர்கள் கூட்டம் என்று தான் சொன்னேனே தவிர, வள்ளல் ராஜதுரை கடன் வாங்கினார் என்றா கூறினேன்?'' என்று அமுதவாணர் கேட்டார்.''ஏற்கனவே குழப்பத்தில் உள்ள என்னை, ஏன் மேலும் குழப்புகிறீர்?'' என்று நொந்து கொண்டார் சொக்கநாதர்.''ராஜவேலு வள்ளல் மாளிகைக்கு எந்தப் புலவர் வந்தாலும் வெறும் கையோடு திரும்பியதே இல்லை. உதவி தேடிச் செல்லும் புலவர்களுக்குப் பொருள் கிடைப்பது உறுதி. எந்தப் புலவன்தான் கடன் வாங்காமல் இருக் கிறான். வள்ளல் ராஜவேலுவின் குணத்தை, புலவர்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் புரிந்து கொண்டு விட்டனர். அதனால் எந்தப் புலவன் வந்தாலும் அவனோடு, கடன் கொடுத்தவர்களும் வந்து விடுகின்றனர். வள்ளலிடம் புலவர் உதவி பெற்றதும், தங்கள் கடன் பாக்கியை அவ்விடத்திலேயே வசூல் செய்து கொள்ளத் திட்டம். அதனால், ராஜவேலு மாளிகையைச் சுற்றி புலவர்கள் கூட்டத்தை விட, கடன் கொடுத்தவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன்,'' என்றார் அமுதவாண புலவர்.ராஜவேலு மாளிகையைச் சுற்றிக் கடன் காரர் கூட்டம் என்று வள்ளலை இகழ்வது போல புகழ்ந்த அமுதவாணரின் புலமையை மெச்சினார் சொக்க நாதர்.''சொக்கநாதரே! நானும் ராஜவேலு வள்ளலை சந்தித்துவிட்டுத்தான் திரும்பு கிறேன். நிறையபொருளுதவி செய்தார். உடன் வந்த கடன்காரர்களுக்கெல்லாம் கடனைத் தீர்த்தேன். என் முதுமையை எண்ணி, என் ஊர் வரை செல்ல, அந்த வள்ளல் பல்லக்கும் ஏற்பாடு செய்தார்,'' என்றார் அமுதவாணர்.சொக்கநாதப் புலவரையும் அதே பல்லக் கில் ஏற்றி அனுப்பினார்.''நீர் போய் ராஜவேலு ஊரில் இறங்கிக் கொண்டு பல்லக்கைத் திருப்பி அனுப்பும்,'' என்றார்.அப்படியே சொக்கநாதப் புலவர் சென்று, வள்ளலிடம் போதிய உதவி பெற்றுத் திரும்பினார். அந்தக் காலத்தில் புலவர்களுக்கு வாரி வாரி கொடுத்து நம் தமிழ்மொழியை வளர்த்தனர். ஆனால், இக்காலத்திலோ தமிழில் பேசுவதே கேவலம் என்று நினைக்கிறோம். இதுதான் காலத்தின் கோலம் என்பது.