உள்ளூர் செய்திகள்

துன்புறுத்தாதே வருணா!

குமரன், மத்திய தரக் குடும்பத்தை சேர்ந்தவர்; நல்ல வேலை; கை நிறைய சம்பளம். மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை. ஒரே மகன் வருணன்; அவன் விரும்பியதை வாங்கிக் கொடுத்து செல்லமாக வளர்த்தார்.வசதியாக வாழ்ந்த வருணன், படிப்பில் கவனம் செலுத்தவில்லை. சில வகுப்புகளில், இரண்டு ஆண்டுகள் படிக்கும் நிலை ஏற்பட்டது. அதோடு, வம்பு சண்டை போடுவான். கெட்டவர்களின் சேர்க்கை அதிகம்.ஆசிரியர் கண்டித்தும், படிப்பில் கவனம் செலுத்தவில்லை; துஷ்டத்தனங்கள் செய்வான். அதாவது, பட்டாம்பூச்சிகளைப் பிடித்து, இறக்கைகளைப் பிடுங்குவது, கண்களை தோண்டுவது, பிறர் தோட்டத்தில், மாங்காய் திருடுவது என, படாத பாடு படுத்தி வந்தான். கோபம் கொண்ட தோட்டக்காரர்கள், கண்டித்து வளர்க்கும்படி புகார் கூறினர். வருணனை திருத்த வழியின்றி தவித்தனர் பெற்றோர்.இதுபோன்றவர்களை, நல்வழிப்படுத்தும் பெரியவர் ஒருவர் இருந்தார். அவர், நீதிக் கதைகளைக் கூறி, சிறுவர்களை திருத்துவதை, சேவையாகச் செய்து வந்தார்.அவரை சந்தித்த குமரன், மகன் வருணனை திருத்த கேட்டுக்கொண்டார்.'உங்க மகனை, தினமும், மாலை, ஒரு மணி நேரம், என் வீட்டிற்கு அனுப்புங்க. மற்ற சிறுவர்களோடு விளையாடி, நல்வழியில் நடப்பான்; கவலைப்படாதீங்க...' என்றார் பெரியவர்.வருணனுக்கு கதை கேட்பதென்றால், மிகவும் பிடிக்கும். இரவில், துாங்கும் முன், கதை கூறும்படி, அம்மாவை வற்புறுத்துவான். இதை சாதகமாக்கி, 'வருணா... உனக்காக, ஒரு தாத்தா, தினமும் கதை சொல்வார்; உன் அப்பாவை, அவரிடம் அழைத்து செல்ல சொல்கிறேன்; உன் விருப்பத்தை சொல்...' என்றாள் அம்மா. மகிழ்ச்சியில் குதித்த வருணனை, பெரியவரிடம் அழைத்துச் சென்றார் குமரன். அவனை அன்போடு அணைத்து, தின்பண்டங்களை அளித்து வசீகரித்தார் பெரியவர். அங்கு சிறுவர்கள், தோட்ட வேலை செய்துகொண்டிருந்தனர். அவர்களுடன், வருணனும் இணைந்தான்.வண்ணத்துப்பூச்சிகள் பிடிப்பதும், கல்லால் மாங்காய் அடிப்பதும் அவனுக்கு சர்வ சாதாரணமாகி விட்டன. பெரியவர், அதைக் கண்டும், காணாதவர் போல் இருந்தார். ஒரு நாள் -ஒரு சிறுவன், மாங்காயை கல்லால் அடித்தான்; அது தவறி, வருணன் தலையில் விழுந்து, ரத்தம் வழிந்தது. கோபமடைந்த வருணன், அந்த சிறுவனை தாக்கினான். சமாதானப்படுத்திய பெரியவர், 'தம்பி... மாங்காயில் அடித்த கல், தவறி உன் மீது பட்டு விட்டது; வேண்டுமென்று அடிக்கவில்லையே; தோட்டக்காரனிடம் கேட்டால், மாங்காய் பறித்து தருவான்; அதை விடுத்து, கல்லால் அடிப்பது தவறு; கல் உன் மீது பட்டதற்காக, நண்பனை தாக்குவது தவறு... 'மனிதனுக்கும், மரத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா... மரத்தில் கல்லால் அடித்தால், கனியை தரும்; திரும்ப உன்னை கல்லால் அடிக்காது. ஆனால், மனிதன், தன் மீது கல் பட்டதும், அடிக்கப் பாய்கிறான். ஒரு மரம் செய்யும் உதவியை, மனிதனால் செய்ய முடியவில்லையே; மரத்தைப் போல், மனிதனும் பிறருக்கு உதவ வேண்டும்...' என்றார்.இதைக் கேட்டு வருந்தி தலைகுனிந்த வருணனிடம், 'உன் செயலுக்காக வருந்தி விட்டாய்; அதுவே போதும்; தோட்டத்தில் வண்ணத்துப்பூச்சிகளைப் பிடித்து, அதன் கண்களையும், இறக்கைகளையும் பிய்த்து வேடிக்கைப் பார்த்தாய்; அது கொடூரச் செயல். உயிர்களை இம்சை செய்ய கூடாது; இதற்கு மகாபாரதத்தில், ஒரு கதை உண்டு... சொல்கிறேன் கேள்...' என்றார்.கதை கேட்கும் ஆர்வத்தில், அவரை அன்புடன் பார்த்தான். பெரியவர் சிரித்தபடி, 'திருதரஷ்டிரன் என்ற மகாராஜாவை தெரியுமல்லவா; அவருக்கு, இரண்டு கண்களும் தெரியாது; அதற்கு காரணம், அவர் சிறுவனாக இருந்த போது, தட்டாரப் பூச்சிகளைப் பிடித்து, கண்களை தோண்டி, அவை துடிப்பதைப் பார்த்து மகிழ்வாராம்... அதனால் தான், அவரது பார்வை பறி போனதாம்; எனவே, இது போன்ற பாவச் செயல்களை செய்ய கூடாது... கொல்லாமையை கடைபிடிக்க வேண்டும்...' என்று அறிவுறுத்தினார்.இக்கதையை கேட்ட வருணன், 'ஐயா... மன்னித்து விடுங்கள்; இனி, இது போன்ற தவறுகளை செய்ய மாட்டேன்...' என்றான்.அவனைச் சமாதானப்படுத்தி, நீதிப் புத்தகங்களை பரிசாக அளித்தார். அவற்றை நன்கு படித்த வருணன், நல்லவன் என்று பெயரெடுத்தான்.குட்டீஸ்... படிப்பில் கவனம் செலுத்தினால், எண்ணம் வேறு பக்கம் போகாது. நல்ல மாணவன் என, பெயர் வாங்கலாம். சரியா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !