உள்ளூர் செய்திகள்

பல்லி படுத்துடுச்சு!

மதுரை, தெற்குவாசல், வைக்கல்காரத் தெரு, நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 1973ல், 9ம் வகுப்பு படித்தேன். அறிவியல் ஆசிரியர் செல்வராஜ், பல்லி நகரும் விதம் பற்றி, அன்று செயல்முறை விளக்கம் காட்டிக் கொண்டிருந்தார். மேஜையில் அமர்ந்தவாறு, இரு கால்களையும் சுவற்றில் பதித்தபடி, விளக்கம் தந்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சறுக்கி மல்லாக்க விழுந்தார். சக மாணவர்கள், 'பல்லி படுத்துடுச்சு...' என்று கத்தியடி சிரித்தனர். சமாளித்தபடி எழுந்து முன்னோக்கி வந்தார்; பயத்தில் நடுங்கி எழுந்தவர்களை, அமருமாறு இடது கையால் சைகை செய்தபடி, கடைசி பெஞ்சு வரிசைக்கு சென்றார். அங்கு, சுகமாக துாங்கிகொண்டிருந்த வனை தட்டி எழுப்பி, இரண்டு அறை விட்டு, 'ஒழுங்கா பாடத்தை கவனி...' என எச்சரித்து திரும்பினார்.பின், 'பல்லி படுக்கலாம்; பள்ளியில் படுக்க கூடாது...' என்றபடி, 'நம்மை நோக்கி வரும் ஏளன சொல் அம்புகளை காலடியில் தள்ளி, இலக்கை நோக்கி நடப்பது தான் அறிவுடமை...' என வலியுறுத்தினார். என் வயது, 62; எத்தனையோ முறை, தகாத சொல் அம்புகளால் தாக்கப்பட்டிருக்கிறேன்; அதை தாங்கும் பக்குவத்தை கற்றுத்தந்த அந்த ஆசிரியரை மனதில் கொண்டுள்ளேன்.- என்.எஸ்.சத்யன், மதுரை.தொடர்புக்கு: 74188 53337


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !