உள்ளூர் செய்திகள்

சீஸ்மோகிராப்!

நிலநடுக்கத்தை பதிவு செய்து, திறனை அளக்கும் கருவி, சீஸ்மோகிரா ப். மனித இன வரலாற்றில், இயற்கைப் பேரிடர்களை புரிந்து கொள்ள உதவிய முதன்மை தொழில்நுட்பக் கருவிகளில் இதுவும் ஒன்று. இதன் ஆரம்ப கால வடிவம், கி.பி., 132ல், சீன விஞ்ஞானி ஜாங் ஹெங் என்பவரால் உருவாக்கப்பட்டது. அது நிலநடுக்கம் ஏற்படும் திசையை மட்டும் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. நிலநடுக்க வலிமை மற்றும் கால அளவை பதிவு செய்யும், நவீன சீஸ்மோகிராப், 19ம் நுாற்றாண்டில், ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானி, ஜான் மில்னால் உருவாக்கப்பட்டது. மிகச்சிறிய அளவிலான நிலத்தடி அசைவுகளையும் உணர்ந்து, பதிவு செய்யும் திறன் உடைய இந்த கருவி. நிலநடுக்கத்தின் போது, பூமி மேற்பரப்பில் உருவாகும் அலைகள், சீஸ்மோகிராப் கருவியை அசைக்கின்றன. அதை பதிவு செய்கிறது கருவி. பதிவுகள், அலை வடிவ கோடுகளாக வெளிப்படுகின்றன. இந்த கோடுகளை ஆய்வு செய்து, நிலநடுக்கத்தின் மையம், அதன் ஆழம், வலிமை மற்றும் பரவியுள்ள பரப்பு போன்ற விபரங்கள் கணக்கிடப்படுகின்றன. பல நாடுகளின், சீஸ்மோகிராப் மையங்கள் இணைந்து, நிலநடுக்கம் ஏற்படுவதை கண்காணிக்கின்றன. நகரமைப்பு, அணை, பாலம், அணுமின் நிலையம் போன்ற கட்டமைப்புகளை உருவாக்கும் போது, நிலநடுக்க அபாயத்தை மதிப்பிட, சீஸ்மோகிராப் பதிவு செய்யும் புள்ளி விபரங்கள் பயன்படுகின்றன. மனித உயிர்களையும், சொத்துகளையும் பாதுகாக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, பெரிதும் உதவுகிறது இந்த கருவி. - நர்மதா விஜயன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !