கல்வியில் கண்டிப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 1968ல், 8ம் வகுப்பு படித்த போது, மின்வாரியத்தில் பணிபுரிந்த என் அப்பாவுக்கு இட மாற்றல் வந்தது. இதனால் சோளிங்கர், அரசு உயர்நிலைப் பள்ளியில் படிப்பை தொடரும் கட்டாயம் ஏற்பட்டது. அங்கு சரித்திரம், பூகோளம் ஆசிரியராக இருந்தார் ஆதிசக்தி; நீண்ட மூங்கில் கொம்புடன் காட்சி தருவார். படிக்காத மாணவியர் உள்ளங்கையை, அது பதம் பார்க்கும். காலை நேர வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை, அன்று மாலையே ஒப்பிக்க வேண்டும். அதை கண்காணிக்க, மாணவர் தலைவரை நியமித்திருந்தார், பூகோள ஆசிரியர்.வகுப்பு நேரத்தில் பாடத்தை நடத்தி முடிக்க இயலாவிட்டால், மற்ற ஆசிரியரின் வகுப்பையும் பெற்று, தொடர்ந்து பாடம் நடத்துவார். ஒருநாள் விடுப்பு எடுத்திருந்தாலும், அன்றைய பாடங்களை தெரிந்திருக்க வேண்டும்.புத்தகத்தில், 10 பக்க பாடங்களை நடத்தினாலும், படித்து ஒப்பிக்க வேண்டும்; கேள்விகளுக்கு மறுநாள் பதில் கூற வேண்டும். தவறினால் அடி கிடைக்கும். இது போன்ற கண்டிப்புகளால், சிறப்பாக படித்து முன்னேறினேன். தற்போது என் வயது, 70; இல்லத்தரசியாக இருக்கிறேன். புதுமை பெண்ணாய் உலா வருகிறேன். பள்ளியில் கற்பித்தல் என்ற கடமையை, கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டுடன் நிறைவேற்றிய சரித்திரம், பூகோள ஆசிரியர் ஆதிசக்தியை, கண்கண்ட தெய்வமாக எண்ணி வணங்குகிறேன். - எஸ்.கவுரி, சென்னை.தொடர்புக்கு: 97898 99418