உள்ளூர் செய்திகள்

தைரியம்!

திருச்சி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1976ல், 9ம் வகுப்பு படித்தேன். எங்கள் ஆங்கில வகுப்பு ஆசிரியை வைதேகி, பாடம் நடத்தும் போது, 'யாரும் புத்தகத்தை பார்க்க கூடாது' என்பார். எதையும் செய்முறை விளக்கத்துடன் விவரிப்பார். எனக்கு ஆங்கிலம் என்றாலே பயம். ஒரு நாள், ஆங்கில இலக்கணம் வகுப்பு முடித்து, மறுநாள் வீட்டுப் பாடம் எழுதி வருமாறு சில வாக்கியங்களை கொடுத்தார். வீட்டுப் படத்தை தவறாக எழுதி விடுவோமோ என்ற பயத்தில், எழுதாமல் வந்துவிட்டேன். மறுநாள் எல்லாருடைய நோட்டையும் பார்த்த ஆசிரியை, என்னிடம் வந்தார். நான், 'தயக்கத்தால் வீட்டுப்படம் எழுதவில்லை' என்ற உண்மையை கூறினேன். 'எதையும் பயத்துடன் அணுகாதே; தயக்கத்தை தவிர்த்து முயற்சி செய்தால் தான், முன்னேற முடியும்' என்று, அறிவுரை கூறினார். ஆசிரியை அளித்த ஊக்கத்தால், மறுநாள் வீட்டுப்பாடத்தை செவ்வனே செய்து, அவரிடம் பாராட்டுப் பெற்றேன். அதன்பின், பல போட்டிகளில் பங்கேற்க செய்து, பள்ளி நாட்களில் என்னை மெருகேற்றினார். கல்லுாரி முடித்து, பி.எட்., படிக்கும் போது, நான் படித்த பள்ளியிலேயே மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதற்கான அனுமதியை, ஆசிரியை வைதேகி தான் வாங்கி கொடுத்தார். அவரது பாணியிலேயே வகுப்பு எடுத்து, தேர்ச்சி பெற்றேன். தற்போது என் வயது, 63. ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து, ஓய்வு பெற்றேன். 'தினமலர்' நாளிதழ் மற்றும் அதன் இணைப்பு புத்தகங்களில், என் பல படைப்புகள் வெளிவந்துள்ளன. வானொலியிலும் பேசி வருகிறேன். பள்ளி பருவத்தில் என் மனதில் என் ஆசிரியை வைதேகி விதைத்த, 'தைரியம்' எனும் விதை தான், எல்லாவற்றுக்கும் காரணம். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறே ன். - நளினி ராமசந்திரன், கோவை. தொடர்புக்கு: 97899 37267


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !