பயன் மரம்!
கடும் வறட்சியிலும் தளராது வளரும் பனைமரம். விசிறி போன்ற ஓலைகளை உடையது. கோடையில் அது தரும் நுங்கு உடலை குளிர்ச்சியாக்கும். உலகின் பல பகுதிகளில் பனை மரம் காணப்படுகிறது. இதன் ஓலை, மரம், வேரில் மருந்து தயாரிக்கப்படுகிறது. கட்டுமான தொழிலில் பெருமளவில் உதவுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது. மண் அரிப்பை தடுக்க உதவுகிறது. வன விலங்கு மற்றும் பறவை இனங்களுக்கு புகலிடமாக உள்ளது.பனையிலிருந்து பதநீர், கருப்பட்டி, கற்கண்டு போன்ற உணவுகள் கிடைக்கின்றன. இவற்றில், சுண்ணாம்பு, புரதம், இரும்பு, வைட்டமின், நார் சத்துக்கள் அதிகம் உள்ளன. ஓலையில் கூடை, பெட்டி, பாய், விசிறி தயாரிக்கலாம். தமிழகத்தில், பழங்காலத்தில் எழுதப்பட்ட தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற நுால்கள், பனையின் சிறப்புகளை கூறுகின்றன. உலகில் பல பொருட்கள் எழுத பயன்பட்டுள்ளன. தமிழகத்தில் பனை ஓலையில் தான் இலக்கியங்கள் அதிகம் எழுதப்பட்டுள்ளன. அதற்கு ஏற்ற வகையில் ஓலை, மென்மை மற்றும் நெளியும் தன்மையுடன் தனித்து விளங்குகிறது. பல நுாற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஓலைகளில் இருந்த கருத்துக்களை, அச்சு வடிவில் கொண்டு வந்தார், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையர். அவர், 90க்கும் மேற்பட்ட சுவடிகளை, அச்சு நுால்களாக பதிப்பித்துள்ளார். - எம்.ஏ.அமுதா