சாதனை படைக்கும் சென்னை!
ஆக., 22 - 384வது சென்னை தினம்உலகிலேயே, லண்டன் மாநகரத்திற்கு பிறகு, மாநகராட்சியாகிய நகரம், தமிழகத்தின் சென்னை தான். அது, 1688ல், முனிசிபல் கார்ப்பரேஷனாக மாறியது, இந்தியாவின் முதல் நகராட்சி.சென்னையிலுள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தான், தமிழகத்தில் முதன் முதலாக இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 15, 1947 அன்று, அதிகாலை, 5.05 மணிக்கு இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது.அந்த கொடி தற்போது, கோட்டை மியூசியத்தில் உள்ளது. இந்த ஒரு தேசியக் கொடி மட்டும் தான், சுதந்திரம் பெற்ற பின் ஏற்றப்பட்ட கொடிகளில் இன்றும் பாதுகாப்பாக உள்ளது. இந்தியாவில் மாநிலங்களின் தலைநகரில், இரண்டு சர்வதேச துறைமுகங்கள் உள்ள ஒரே இடம், தமிழகத்தின் சென்னை தான். இங்கு சென்னை துறைமுகம் மற்றும் எண்ணுார் துறைமுகம் என, இரண்டு சர்வதேச துறைமுகங்கள் உள்ளன.உலகிலேயே இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம், தமிழகத்தின் சென்னை உயர் நீதிமன்றம் தான்.இந்தியாவில் நீண்ட கடற்கரை, சென்னை கடற்கரை. இதன் நீளம், 12 கி.மீ., உலகிலேயே இரண்டாவது நீளமானது, சென்னை கடற்கரை தான்.உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 'லிப்ட்' வசதி கொண்ட கலங்கரை விளக்கங்களில் ஒன்று, சென்னை கலங்கரை விளக்கம். இங்கு, லிப்ட் மூலம் ஒன்பதாவது தளம் வரை செல்ல முடியும்.இந்தியாவில் நகர எல்லைக்குள் அமைந்துள்ள ஒரே கலங்கரை விளக்கமும் இதுதான். சென்னை கலங்கரை விளக்கத்திற்கான மின்சாரம், சூரிய மின் தகடுகள் வாயிலாக உற்பத்தி செய்யப்படுவது மற்றொரு சிறப்பு.இந்தியாவில், சென்னை நகரில் தான் அதிக மேம்பாலங்கள் உள்ளன. உலகிலேயே நகரப்பகுதிக்குள் அமைந்திருக்கும் ஒரே தேசிய பூங்கா, சென்னை கிண்டி தேசிய பூங்கா தான். 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டது.உலகிலேயே அனைத்து தரைவழி போக்குவரத்து வாகனங்கள் மற்றும் தரை வழியாக செல்லும் தளவாடங்கள் தயாரிக்கப்படுவது, சென்னையில் தான். சைக்கிள் (டி.ஐ., சைக்கிள்) முதல் இருசக்கர வாகனங்கள், கார், டிரக், ராணுவ பீரங்கிகள், ரயில் இன்ஜின்கள் மற்றும் ரயில் பெட்டிகள் வரை இங்கு தயாராகிறது.பழங்கற்காலம் சார்ந்த கற்களால் ஆன ஆயுதங்கள், ஆசியாவிலேயே முதன்முதலாக புதை பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டது, சென்னை பல்லாவரம் மற்றும் திரிசூலம் பகுதியில் தான். 1863ம்ல், கண்டறியப்பட்டது.'கொரோனா' வைரஸ் போன்ற, நோய் தொற்றுகளை, ரத்த மாதிரிகளை கொண்டு அடையாளம் தெரிவிக்கும், கிங்ஸ் இன்ஸ்டிடியூட், சென்னை கிண்டியில் உள்ளது. இது சென்னை மாகாண சுகாதார கமிஷனராக இருந்த, டபிள்யு.ஜி.கிங் நினைவாக, 1897ல், பிரிட்டிஷ் அரசால் நிறுவப்பட்டது.பெரிய அம்மை, போலியோ, காலரா மற்றும் இன்புளுவென்சியா நோய்களுக்கு தடுப்பூசி தயாரித்தது, இந்நிறுவனம் தான்.பென்சிலின் மருந்தை கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங், 1953ல் இங்கு வந்து, பென்சிலின் மருந்து வேலை செய்வதை, 'டெமன்ஸ்டிரேஷன்' செய்து காட்டி உள்ளார்.இந்தியாவை பிரிட்டிஷ் அரசு ஆண்ட காலத்தில், ஏப்., 10, 1802ல், இந்தியா முழுவதும் சர்வே செய்வதற்கு திட்டமிட்டது. இதற்காக, 'கிரேட் டிரிகோனொ மெட்டிகல் சர்வே ஆப் இந்தியா' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் விளைவாகத் தான், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் தெரிய வந்தது. இதன்படி சர்வே முதன்முதலாக ஆரம்பித்த இடம் சென்னை செயின்ட் தாமஸ் மவுன்ட் எனப்படும் பரங்கிமலை.அடுக்குமாடி குடியிருப்புகள், மால்கள், மிகப்பெரிய வணிக வளாகங்களில் இயங்கும் 'லிப்ட்'கள் தயாரிப்பில், இந்தியாவில் முன்னணியில் உள்ளது, ஜான்சன் நிறுவனம். 50 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட, 'லிப்ட்'களை, இந்தியா முழுவதும் நிறுவி, மார்க்கெட் சப்ளையில், 22 சதவீதத்தை தன்னிடம் வைத்திருக்கும் இந்நிறுவனம், 1963ல், சென்னை வியாசர்பாடியில், ஒரு சிறிய ஷெட்டில் ஆரம்பிக்கப்பட்டது.தமிழகத்தின் சென்னையில் தயாராகும் மோட்டார் சைக்கிள்கள், உலகின், 60 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 'ராயல் என்பீல்டு' நிறுவனம் தயாரிக்கும், 350 சிசி புல்லட் மோட்டார் சைக்கிள்கள் தான் அவை. சென்னை, திருவொற்றியூர் தொழிற்சாலையில் மோட்டார் சைக்கிள்கள் தயாராவதை பார்க்க, 'பைக்' ரசிகர்கள் விரும்பினால், அனுமதி வழங்கப்படுகிறது.ஒரே தரத்தில், சுவையான ரொட்டிகளை, 138 ஆண்டுகளாக தயாரித்து வழங்கி வருகிறது, ஒரு பேக்கரி கடை. அது தான், சென்னையில் செயல்பட்டு வரும், 'ஸ்மித் பீல்ட் பேக்கரி!' 1885ல் நிறுவப்பட்ட இது, இன்றும் ஒரே தரத்தில் பேக்கரி வகைகளை தயாரிக்கிறது.உலகளவில் நான்காவது இடத்திலும், பிரிட்டிஷ் சேப்டி கவுன்சில் வழங்கிய, ஐந்து நட்சத்திர அந்தஸ்து உள்ள, ஒரே இந்திய கப்பல் கட்டுமான பணி மற்றும் பராமரிப்பு நிறுவனம், எல்.அண்டு.டி., இது, தமிழகத்தின் வட சென்னை பகுதியிலுள்ள காட்டுப்பள்ளி எனும் ஊரில் உள்ளது.- ஞானதேவ்ராஜ்