சுவாமி பாதத்தில் அம்மன்!
கோவில்களில் அம்மனுக்கென தனி சன்னிதி இருப்பதை பார்த்திருப்பீர். ஆனால், ஒரு சுவாமியின் காலில், அம்மன் மறைந்திருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இதைப் பார்க்க அங்குமிங்கும் அலைய வேண்டியதில்லை. உங்கள் ஊர் கோவிலில், நடராஜர் சன்னிதி இருந்தால், அவரது குஞ்சிதபாதத்தில், அம்பாளைத் தரிசிக்கலாம்.பார்வதியை, தன் இடது பாகத்தில் வைத்திருக்கிறார், சிவன். ஒருவரது இடது பாகத்தில் தான், இதயம் இருக்கிறது. இதனால் தான், 'உன்னை என் இதயத்தில் குடி வைத்திருக்கிறேன்...' என, மனைவியைப் பார்த்து வர்ணிப்பார், கணவர்.ஆனால், சிவன், தன் இடது பாகம் முழுவதையுமே தன் மனைவி பார்வதிக்கு அர்ப்பணித்து, அர்த்தநாரி என, பெயர் வாங்கி விட்டார். அர்த்தநாரி என்றால், பாதி உடலை பெண்ணாகக் கொண்டவர் என, பொருள்.நடராஜர், துாக்கிய இடது திருவடியான குஞ்சிதபாதத்தில், மனைவி பார்வதியை வைத்திருக்கிறார். சிவன், உயிர் என்றால், பார்வதி, சக்தி. சக்தியின்றி சிவமில்லை, சிவமின்றி சக்தியில்லை என்பது, இதனால் தான்.இப்படித்தான் தம்பதி இருக்க வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்த, இவ்வாறான கோலத்தில் இருக்கிறார். சரி... பார்வதி அவரது இடது காலில் இருப்பது ஏன்?குஞ்சிதம் என்றால் மருந்து. நடராஜரின் இடது பாதத்தில் வெட்டிவேர் மற்றும் சில மூலிகைகளைக் கலந்து கட்டியிருப்பதைக் காணலாம். தீராத நோய்கள் தீர இந்த பாதத்தையும், அதில் கட்டியுள்ள மருந்தையும் பார்த்தாலே போதும்.முக்தியடைவதற்கு முன், சிதம்பரம் நடராஜரின் குஞ்சிதபாத தரிசனத்தைக் காண விரும்பினார், காஞ்சிப் பெரியவர். ஆனால், அவரது உடல்நிலை, சிதம்பரம் வரை செல்ல இடம் கொடுக்கவில்லை. அதேநேரம், ஒரு அதிசயம் நிகழ்ந்தது.சிதம்பரத்திலிருந்து சில தீட்சிதர்கள், பெரியவரைக் காண வந்தனர். அவர்களின் கையில் நடராஜருக்கு சாத்தப்பட்ட குஞ்சிதபாதம் இருந்தது. அதை பெரியவரிடம் பிரசாதமாக அளித்தனர். அந்த மகான் எதை விரும்பினாரோ, அதை நடராஜரே கொடுத்து அனுப்பியதாகத் தான் அனைவரும் கருதினர். அதை வாங்கி, தன் சிரசில் வைத்துக் கொண்டார்.நடராஜர் எதற்காக இடதுகாலை துாக்கியிருக்கிறார். இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என, பாபநாசம் முதலியார் என்ற மகா கவிஞர், ஒரு பாடல் எழுதியுள்ளார். அதில், 'சக்தி சிவகாமவல்லி, தன் பாதம் நோகுமென்றே தரையில் அடி வைக்க தயங்கி நின்றதுவோ?' என்கிறார்.தன் இடது பாகம் முழுவதையும் மனைவிக்கு தந்து விட்டோமே... அதில் தானே இடது பாதமும் அடக்கம். அந்த பாதத்தை, அவள் ஊன்றி நின்றால், அவளுக்கல்லவா கால் வலிக்கும் என்று, அதை துாக்கி வைத்துக் கொண்டாராம், நடராஜர்.கணவனும், மனைவியும் எந்தளவுக்கு அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே, நடராஜரின் இடது பாத தத்துவம். தம்பதி சமேதராக குஞ்சிதபாதத்தை தரிசித்து, ஒற்றுமையாய் வாழுங்கள். தி. செல்லப்பா