உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

ஆர்.மாணிக்கம், பண்ருட்டி: காதலிக்க வாய்ப்பு கிடைத்தும், காதல் செய்யத் துணிவில்லையே...பெரும்பாலான காதல், வெற்றி கிட்டாமலேயே முடிந்து விடுகிறது. பிரிவு என்பது, மிகுந்த வேதனையைத் தரக் கூடியது என்று, பிரிந்தவர்கள் கூறக் கேட்டும், அவர்களின் வேதனையைப் பார்த்து அறிந்தும் உள்ளதால், உங்களுக்கு துணிவு வராமலேயே போகட்டும்!எஸ்.மலையரசன், கீழ்க்கட்டளை: வருமானத்திற்கும் அதிகமான செலவு வந்து வாட்டுகிறது; யாரிடமாவது கடன் வாங்கலாம் என்றால், கேட்க கூச்சமாக உள்ளதே...கூச்சம் நிறையவே இருக்கட்டும். அப்போதுதான், இரவில் நிம்மதியாக தூக்கம் வரும்; கடன் வாங்கியவனால், தூங்கவே முடியாது!கே.எஸ்.பசுபதி, காளனம்பட்டி: 'அம்மா' என்று, முழுமையாகக் கூடச் சொல்லத் தெரியாத சின்னஞ் சிறு பிஞ்சுகளை, கான்வென்டில் தள்ளி விடுவது எந்த வகையில் நியாயம்?மிகக் கொடுமை இது! பலவித நோய்கள் கூட வர வாய்ப்புள்ளது; நான்கு வயது முடிந்தபின் தான், பிஞ்சுகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்!வி.கார்த்திகேயன், திருவாரூர்: என் கணவருக்கு வயது,78; தான, தர்மங்கள் பல செய்தவர். கோவிலுக்குப் போகும் வழியில் கிடக்கும் கல், கண்ணாடிகளைக் கூட எடுத்து, ஓரமாக போட்டுச் செல்லும் வழக்கம் உள்ளவர். இவரது செயலைக் காணுவோர், எள்ளி நகையாடுகின்றனரே...பிறர் பாராட்டை எதிர்பார்த்தோ, கேலியைக் கண்டு அஞ்சியோ செய்யப்படுவது சேவையாகாது என்பதை, நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதை, உங்கள் கணவர் புரிந்து கொண்டுள்ளார் என்பது, பிறர் எள்ளி நகையாடிய போதும், அவர் தொடர்ந்து, தம் செயலில் ஈடுபடுவதிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது!ம.செந்தில்நாதன், சாலிகிராமம்: பாமர மக்களுக்கும் கூட, போலீஸ் பயம் போயிடுச்சே... என்ன காரணம்?காசு கொடுத்தால், போலீசாரை வாங்கி விடலாம் என்று நினைக்கும் அளவுக்கு, போலீசாரே தம்மை தரம் தாழ்த்திக் கொண்டதாலும், சினிமாக்களில், போலீசை கேவலமாக சித்தரிப்பதாலுமே இந்நிலை!டி.எஸ்.ஜீவதுரை, நங்கநல்லூர்: சமைப்பது ஒரு கலை என்றால், அதைச் சாப்பிடுவதும் ஒரு கலை தானே?மிகச் சரியாகச் சொன்னீர்... எனக்குத் தெரிந்த பலர், பொரியல், கூட்டு, அப்பளம், குழம்பு எல்லாவற்றையும் கலந்து ஒரே வெட்டாக, வெட்டுவர். ஒரு சிலர், நாம் குழம்பு சோற்றை முடிக்கும் முன், மோர் சோறு முடித்திருப்பர்; அவ்வளவு அவசரமாக, ருசி பார்க்காமல் சாப்பிடுவர். இன்னும் சிலர், அருமையான பால் பாயசத்தில், பூந்தி, அப்பளம் எல்லாவற்றையும் கலந்து, கையை ஒரு சுழற்று சுழற்றி, 'சர்' என, உறிஞ்சுவர் பாருங்கள்... அத்துடன், ஊறுகாயையும் ஒரு நக்கு... அருமைதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !