அந்துமணி பதில்கள்
* பி. மூர்த்தி, புதுப்பாளையம்: அமைதி இழந்து தவிக்கிறது என் மனம்... யாரிடம் ஆலோசனை கேட்டால் மன அமைதி திரும்பும்?மன அமைதி வேண்டி, அவரவரே தவித்துக் கொண்டிருக்கும் காலமிது; எனவே, யாரிடம் சென்று ஆலோசனை கேட்டாலும் பயன் இல்லை. உங்களைத் தவிர, உங்களுக்கு மன அமைதியைத் தர ஆள் கிடையாது! நிதானமாக யோசியுங்கள்... மன அமைதி இழந்ததற்கான காரணம் புலப்படும். அவற்றை களையுங்கள்; ஓடி வரும் மன அமைதி!* எஸ்.கண்ணன், திருச்சுழி: அந்திம காலத்தில் பெற்றோரை கண் கலங்காமல் காப்பாற்றுவது பெற்ற மகனா, மகளா?இருவருமே அல்ல; பணம் தான்! கடைசி காலம் வரை வாழத் தேவையான பணத்தை சேமித்து வைத்துக் கொள்ளாவிட்டால், மகனாவது, மகளாவது!டி.தர்மா, சென்னை: நீர் இறைக்கும் மோட்டர்கள் பற்றி பேசும்போது, 'ஐந்து ஹார்ஸ் பவர் மோட்டர், பத்து ஹார்ஸ் பவர் மோட்டர்' என, குறிப்பிடுகின்றனரே... 'ஹார்ஸ் பவர்' என்றால் என்ன?ஒரு நொடியில், 1,210 கிலோ எடை உள்ள ஒரு பொருளை, ஒரு அடி உயரத்திற்கு தூக்கத் தேவையான சக்தியை ஒரு, 'ஹார்ஸ் பவர்' - - ஒரு குதிரையின் சக்தி எனக் கணக்கிட்டு கூறினர் பிரிட்டிஷார். இப்போது இதை, 'கிலோ வாட்' எனக் குறிப்பிடுகின்றனர்!கே.ராகவன், சிவகாசி: பனிப் பிரதேசத்தில் வாழும் மக்களை, 'எஸ்கிமோ' என்று அழைக்கின்றரே... அதன் பொருள் என்ன?'எஸ்கிமோ' என்றால், பச்சை மாமிசம் சாப்பிடுவோர் என்பது பொருள். இது செவ்விந்திய மொழி. இவர்களுக்கு இப்பெயரைச் சூட்டியவர்கள் ஐரோப்பியர்!எம். கலைச்செல்வி, திருத்தங்கல்: நான் மிகவும் கோழையாக இருக்கிறேன்...அப்படி என்றால், நீங்கள் வாழ விரும்பாதவராக இருப்பீர். வாழ்ந்தே தீர வேண்டும் என்ற துணிவு உங்களிடம் இருக்குமானால், கோழைத்தன்மை மறைந்து போகுமே!ஆர்.மோகனா, நரிமேடு: உங்களுக்கு வரும் காதல் கடிதங்கள் பற்றி உங்கள் கணிப்பென்ன?வரட்டும்... அப்புறமல்லவா கணிக்க முடியும்!* ஆர். சண்முகம், பல்லாவரம்: மென்மையான மனமுடைய பெண்களால், காவல் துறையிலும், ராணுவத்திலும் எப்படி பணிபுரிய முடிகிறது?நூற்றுக்கு நூறு கடமை உணர்வு கொண்டவர்கள் பெண்கள்! தமக்கு இடப்பட்ட பணியை செம்மையாக செய்து முடிப்பதில் கவனமுடன் செயல்படும் இயல்பு கொண்டவர்கள் என்பதால், மென்மையான மனம் இருப்பினும், நீங்கள் கூறிய பணிகளில் சிறப்பாகச் செயல்பட முடிகிறது!