உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

'சென்னை ஒரே போருப்பா... எங்கேயாவது போய் வரலாம்...' என, அண்ணாச்சி கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, இன்கம்டாக்ஸ் ஞானசேகர், பெரியசாமி அண்ணாச்சி, ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்ட அட்வகேட் அழகர் ராஜா, (அங்கே போர் அடிக்கிறதாம்; மனைவியிடம் சாக்கு போக்கு சொல்லி நண்பர்களை காண இங்கே வந்து விட்டார்.) லென்ஸ் மாமா மற்றும் நான்... கிழக்கு கடற்கரைச் சாலை, சென்னையில் இருந்து, 90 கி.மீ., தொலைவில் உள்ள நண்பரின் பண்ணை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தோம். வண்டியை லென்ஸ் மாமா ஓட்டிக் கொண்டிருந்தார்.'எம்ப்ளாய்மென்ட் ஆபிசுல பதிஞ்சி, அஞ்சு வருஷம் ஆச்சு, ஆறு வருஷம் ஆச்சுன்னு ரொம்ப பேரு புலம்பிக்கிட்டு இருக்காங்கல்ல... நீ கூட ஒரு தடவை, கேள்வி - பதில் பகுதியில, 'இப்படிப்பட்ட நிலை தொடர்ந்துச்சுன்னா அந்த ஆபிஸ் இருக்கும் திசை பக்கம் கூட திரும்பிப் பாக்காம, பிழைக்கிற வழியை பாருங்க'ன்னு எழுதி இருந்தே... நினைவு இருக்கா?' எனக் கேட்டார் ஞானசேகர்.'நினைவு இருக்கு ஜீ... அஞ்சு, ஆறு வருஷம் வேல இல்லாம, அப்பா, அம்மா கையை எதிர்பார்த்து, 'தண்டச்சோறு'ன்னு, 'அடிஷனல்' பட்டம் வாங்கிட்டு ஒரு இளைஞன் இருந்தால், அவன் மனதால எவ்வளவு பாதிப்பு அடைவான், சமூகத்தில அவனுக்கு என்ன அந்தஸ்து கிடைக்கும்... இதெல்லாம் நெனச்சுப் பார்த்து தான் அப்படி எழுதினேன்...' என்றேன்.'அட போப்பா... என் வீட்டுக்காரி, 1986ல, காஞ்சிபுரம் எம்ப்ளாய்மென்ட்ல பதிவு செஞ்சுருந்தாங்கப்பா... போன வாரம், இன்டர்வியூ வந்திருக்கு... மனுஷன் என்னிக்குமே மனம் தளரக் கூடாது. பொறுத்தவர் பூமி ஆள்வாருன்னு சும்மாவா சொன்னாங்க... அதனால, 'இளைஞர்களே மனம் தளராதீர்கள்'ன்னு எழுதிடு...' என்று கூறி, வெடிச் சிரிப்பு சிரித்தார்.பேசிக் கொண்டிருக்கும் போதே, மர நிழலில் வண்டியை நிறுத்தினார் மாமா.இயற்கையின் உந்துதலை இறக்கி வைக்கப் போகிறார் என, நினைத்தேன்.'யாருக்கெல்லாம், 'ஹெனிக்கன்' வேணும்? ஐஸ் பாக்சுல போட்டு வச்சு இருக்கேன்... சும்மா ஜில்லுன்னு இருக்கும்...' என்றபடியே இரண்டு, மூன்று பீர் கேன்களை எடுத்து வந்தார். சேகரும், ராஜாவும் ஆளுக்கொன்றைப் பெற்றுக் கொண்டனர்.'இதெல்லாம் பெரிய விஷயமாப்பா... எங்க காலத்துல...' என அண்ணாச்சி, சுயபிரதாபம் ஆரம்பிக்கு முன், 'போதும் அண்ணாச்சி... பழைய கதையை திரும்பத் திரும்பச் சொல்லி பிளேடு போடாதீங்க...' என கடித்த சேகர், கேனின் கொண்டியை இழுத்தார். நுரை பொங்க எட்டிப் பார்த்த பீரை, 'சர்' என உறிஞ்சினார்.இரண்டு, மூன்று கேன்களை ஏற்றிக் கொண்ட பின், 'மணி... நீ டிரைவ் பண்ணுறியா?' எனக் கேட்டபடி சாவியை என்னிடம் தந்தார் மாமா.கார் அமைதியாக போய்க் கொண்டிருக்க, 'அண்ணாச்சி... நீங்க ஏன் உ.பா., தொடறது இல்ல... காமாலை, கீமாலை வந்துருந்துச்சா... இல்ல எப்போதுமே கிடையாதா?' என சேகர் கேட்க, 'காமாலைன்னதும் தான் ஒரு ஜோக் ஞாபகம் வருதுப்பா...' என, ஆரம்பித்தார் ராஜா.'இங்கே கொஞ்ச நாள் கோர்ட்டுக்குப் போய் குப்பை கொட்டிக்கிட்டு இருந்தேனுல்ல... அப்ப ஒரு சம்பவம் நடந்தது. நம்ம நீதிமான்கள் எவ்வளவு புத்திசாலிகளா இருக்காங்கங்கறதுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.'சீனியர் அட்வ கேட்டுங்க, ஏதாவது ஒரு காரணத்தால குறிப்பிட்ட கேசுகளில் ஆஜராக முடியாம போகும். அடுத்த ஹியரிங்கின் போதும் ஆஜராகாமப் போனா, கேசு வேற மாதிரி ஆயிடும். அதனால, மெடிக்கல் கிரவுண்டுல ஆஜராக முடியலன்னு டாக்டர் சர்ட்டிபிகேட் கொடுத்தா பிழைச்சுக்கலாம்.'அப்படித்தான் ஒரு டிஸ்டிரிக்ட் முன்சீப் கோர்ட்ல, 'யுவர் ஹானர்' எனச் சொல்லியபடி ஒரு ஜூனியர், தன் சீனியருக்கு, 'மஞ்சக் காமாலை' எனக் கூறி, வழக்காட மாற்று தேதி கேட்டார். அடுத்தவர், 'எல்லோ பீவர்' எனக் கேட்டார். மற்றவர், 'ஜாண்டீஸ்' என்றார். எல்லாவற்றையும் சிரித்துக் கொண்டே குறித்துக் கொண்ட நீதிபதி, அடுத்த ஜூனியர், மெடிக்கல் சர்ட்டிபிக்கேட்டை நீட்டவும், 'என்ன... உங்க சீனியருக்கும் ஜாண்டீசா?' எனக் கேட்டார். 'நோ யுவர் ஆனர்... அவருக்கு வைரஸ் ஹெப்படைடிஸ்...' என்றார். இதுவும் மருத்துவ மொழியில், மஞ்சள் காமாலை தான்!'இதைக் கேட்டதும், ஜட்ஜ் ஒரு நிமிடம் திகைத்து, பின் சுதாரித்து, 'ஓகோ... நல்ல டாக்டரைப் பார்க்கச் சொல்லு...' என அட்வைஸ் செய்தார்.'அங்கே இருந்த விவரம் தெரிந்த எல்லா ஜூனியர்களும், சிரிப்பை அடக்க முடியாமல் நைசாக தலையை திருப்பிக் கொண்டனர். இதுதான் இங்குள்ள பெரும்பாலானவர்களின் தகுதி...' எனக் கூறி சிரித்தார்; நாங்களும் தான்.நண்பரின் பண்ணை வீட்டில் தடபுடல் கவனிப்புகள்... செவ்விளநீர் காய்களை குலை குலையாக வெட்டி இறக்கினார்.ஏழு, எட்டு இளநீர் குடித்தார் அண்ணாச்சி. மற்ற பெரிசுகள் சீமைச் சரக்குகளை கவனித்துக் கொண்டிருந்தன. வறுத்த நெய் மீன், 'சைடு'க்கு வந்து கொண்டே இருந்தது.'இந்த பெரிசுங்க தொல்ல தாங்க முடியலப்பா...' என, கடிந்து கொண்டார் சேகர். அவரே பெரிசு, அவர் அண்ணாச்சியை பெரிசு எனச் சொல்லி தொடர்ந்தார்...'எங்க ஆபிசுல, எல்லாரும் கண்டிப்பா கம்ப்யூட்டர் டிரெயினிங் எடுக்கணும்ன்னு உத்தரவு போட்டு இருக்காங்கப்பா... அடுத்த ஆறு மாசத்துல, ஓய்வு பெற போற பெரிசு கூட கம்ப்யூட்டர் படிச்சாகணும்ன்னு ஆர்டர். ஆபிசே முணுமுணுத்துச்சுப்பா... மெடிக்கல் லீவு போடலாமா, அந்த லீவு போடலாமா, இந்த லீவு போடலாமா எனப் பலர் பேசிக்கிட்டாங்க. என்.ஐ.ஐ.டி.,யில டிரெயினிங்... ஒண்ணு, ரெண்டு பெரிசுக, முத நா வரலே... என்ன நடந்துச்சோ தெரியல, அடுத்த நாள் முதல், நிஜமாவே, உடம்பு சரியில்லாம இருந்த பெரிசுகள் கூட, என்.ஐ.ஐ.டி.,ல, ஆஜராகிட்டாங்க.'மொத நா வந்த பெரிசுங்க, வராத பெரிசுங்களுக்கு போன் போட்டு பேசுனது அப்புறம்தான் தெரிய வந்துச்சு.'எங்க ஆபிஸ் டைம் காலை,9:45ல இருந்து மாலை, 5:30 மணி வரை. இதே டைம்ல தான் கம்ப்யூட்டர் டிரெயினிங்கும்... பல பெரிசுங்க, 11:00 மணிக்கு முன்னால ஆபிசுக்கு வந்த சரித்திரமே கிடையாது. ஆனா, இப்ப கம்ப்யூட்டர் சென்டருல, 9:30 மணிக்கே ஆஜராயிடுறாங்க.'என்னடா சூட்சுமம் இதுலே... கம்ப்யூட்டர் மேல அவ்வளவு காதல் வந்துடுச்சா... இல்லே, தொழில் பக்தி கூடிப் போச்சா என ஆச்சரியப்பட்டுட்டு இருக்கும் போது தான் விஷயமே புரிஞ்சது... 'டேய் சேகரா... பாடம் சொல்லிக் குடுக்கறாளே அந்தக் கொழந்த... எப்படி இருக்கா பாரு தேவத மாதிரி. முகத்துல ஒரு மாசு, மருவு உண்டா... நம்ம வீட்டுலயும் கெடக்கே கெழம்...' என, ஒரு பெரிசு, ஒரு நாள் கதய எடுத்து விட்டதே பார்க்கணும்... 'ஓய் பரமேஸ்வர ஐயர்... இந்த லொள்ளு தானே வேண்டாங்கறது...' என மிரட்டுனதுக்கு அப்புறம் எங்கிட்டே வர்றது இல்லே. பெரிசுங்கல்லாம் இப்ப ஜோடி சேத்துக்கிட்டு, 'சைட்' விட்டுக்கிட்டு இருக்கு...' என்றார்.'யே... ஞானம்... பெரிசுங்கன்னா ஆசாபாசம் உணர்ச்சி இல்லாமலா போயிரும்; சும்மா கெட...' என அடக்கினார் அண்ணாச்சி.மாலையில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். அடையாறு, 'சொரண்டோ' சிக்னல்...'பட்டுச்சேலை காத்தாட...' என, ஏதோ ஒரு பழைய பாட்டை பாடிக் கொண்டு, முன்பக்கம் நின்ற பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த லேடியை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த மாமா, சிவப்பு விழுந்ததைக் கவனிக்காமல் வண்டியை செலுத்த, டிராபிக் கான்ஸ்டபிள் ஒருவர் தடியைத் தூக்கி, வண்டியை நிறுத்தி விட்டார்.எல்லாருமே கீழே இறங்கினோம்.'ஏன் சார்... கண்ணு கிண்ணு தெரியலையா... அதான், 'ரெட் சிக்னல்' போட்டாச்சுல்ல... அப்புறமும் ஏன் வர்றீங்க... நீங்கல்லாம் படிச்சு என்ன பிரயோஜனம்... சுப்பன், குப்பனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?' என, அடுக்கிக் கொண்டே போனார்.மிகப் பொறுமையாக, தான் யார் என்பதை காட்டிக் கொள்ளாமல், போலீஸ்காரர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார் மாமா. ஏதோ தமாஷ் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து, நாங்களும் பேசாமல் இருந்தோம்.இதனிடையே அடுத்த, 'சிக்னலில்' மாட்டிக் கொண்டது ஒரு மோட்டார் பைக். அதை மடக்கி, ஓட்டியவரை அழைத்து வந்து விட்டார் போலீஸ்காரர். அவருக்கும் அர்ச்சனை நடந்தது.'சரி சரி... கேஸ் எழுதணும், வண்டி நம்பரைச் சொல்லு...' என, மோட்டார் சைக்கிள் ஓட்டியவரிடம் போலீஸ்காரர் கேட்க, அவர், 'த.நா.பூஜ்யம் ழ.கு.கூ.கி.கீ.பு...' என்றார்.'இன்னாப்பா... சாயங்காலம் ஏழு மணிக்கே ஊத்திக்கினியா... இல்லே, என்னை நக்கல் பண்ணுறியா?' எனக் கேட்டார் போலீஸ்காரர்.'இல்லை ஐயா... நான், எண்ணை தமிழில் பகன்றேன்...' என, மோட்டார் சைக்கிள்காரர் விவரிக்க, 'சரி சரி... வண்டிய எடுத்துக்கிட்டுப் போங்க...' என, அவரிடம் கூறிவிட்டு, அவர் போவதை கவனித்த பின், 'கல்வித்துறை அமைச்சருக்கு வேண்டியவனா இருக்கப் போறான்... எனக்கெதுக்கு வம்பு! சரி சரி... நீங்களும் போங்க...' என, எங்களையும் அனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !