நீர்த்தாவரங்கள்!
பக்கத்து வீட்டில் குடியிருக்கும் வாசு, பரபரப்பாக கேட்டைத் திறந்து, உள்ளே வருவதைப் பார்த்து, வெளியில் வந்தாள் அகிலா.''என்னாச்சுப்பா... ஏன் இப்படி பதட்டமா வர்றே?''''அம்மா, விடியற்காலையில் சுபாவுக்கு வயிற்றுவலி அதிகமாகி, துடிச்சுப் போயிட்டா. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனேன். உடனே அப்பென்டிஸ் ஆப்ரேஷன் செய்யணும்ன்னு சொல்லி, ஆப்ரேஷன் செய்திட்டாங்க.... இப்ப துணைக்கு ஆள் இல்லாம இருக்கா. அதான் உங்களை பார்த்துச் சொல்லி...''தயக்கத்துடன், வாசு, அவளைப் பார்க்க, ''என்ன வாசு, எதுக்கு தயக்கம். ஆத்திர அவசரத்துக்கு உதவி செய்யலன்னா எப்படி... இதோ நான் புறப்பட்டு வரேன். ஒரு பத்து நிமிஷம் வெயிட்டு பண்ணு,'' என்றாள்.''லதா... லதா'' அழைக்க, வந்து நின்ற மருமகளிடம், ''எனக்கு மாத்து துணியை எடுத்து, ஒரு பையில் வச்சு, கொண்டு வாம்மா. பக்கத்து வீட்டு சுபாவுக்கு, வயிற்றில் ஆப்ரேஷன் பண்ணியிருக்காம். துணைக்கு இரண்டு நாள் ஆஸ்பத்திரியில் இருந்துட்டு வரேன்.''''என்னப்பா, சுபா எப்படியிருக்கா?'' கேட்டபடி அகிலா உள்ளே வர, ஹாலில் உட்கார்ந்திருந்த வாசு, எழுந்து கொண்டான்.''வாங்கம்மா. உள்ளே படுத்திருக்கா. இப்ப கொஞ்சம் பரவாயில்லை. நீங்க சமயத்துக்கு ரொம்ப உதவியா இருந்தீங்க. 'எங்கம்மா இருந்திருந்தா கூட, இப்படி கவனிச்சிருக்க மாட்டாங்க'ன்னு, சுபா உங்களை பத்தி சொல்லி சந்தோஷப் பட்டா.''அருகில் உட்கார்ந்த அகிலாவின் கைகளை, அன்புடன் பற்றிக் கொண்டாள் சுபா.''ரொம்ப நன்றிம்மா. பெற்ற மகளைப் போல் பார்த்துக்கிட்டீங்க.''''இருக்கட்டும் சுபா. நீ தாயில்லாத பொண்ணு. உங்க அண்ணன் உனக்கு கல்யாணம் செய்து வச்சு, கடமை முடிஞ்சதா ஒதுங்கிட்டாரு. என்ன செய்யறது... உனக்கு அன்பான கணவன் கிடைச்சிருக்கான். அதை நினைச்சு சந்தோஷப்பட வேண்டியது தான்.''சொன்னவள் இருவரையும் பார்த்து, ''நான் ஒண்ணு கேட்கலாமா?'' என்றாள்.''சொல்லுங்கம்மா...''''உனக்கு தான் பெத்தவங்க இல்லை. ஆனா, வாசுவுக்கு அம்மா, அப்பா இருக்காங்க. அந்த உறவுகளோடு நீங்க நல்லபடியா இருந்திருக்கலாமே.... அம்மா, அப்பாவை புறக்கணிச்சு, ஏன் இப்படி, தனியா வாழ்ந்துட்டிருக்கீங்க?''''அம்மா, நீங்க சொல்றது எங்களுக்கு புரியுது. கல்யாணமான புதுசில் நாங்களும் , அவர்களோடு ஒத்துமையாகத் தான் இருந்தோம். ஆனா, எங்க மாமியாருக்கு, எதையும் தப்பாக எடுத்துக்கிற குணம். மகனையும், மருமகளையும் வேறுபடுத்திப் பார்ப்பாங்க. என்னை ஒரு பொருட்டாக மதிக்காமல், மனம் நோக பேசுவாங்க. எவ்வளவு நாளைக்கு தான் பணிஞ்சு போக முடியும்... நான் எதிர்கேள்வி கேட்க, பல விஷயங்களில், மனக்கசப்பு ஏற்பட்டு போச்சு. இவரும் கோபமாக, 'இனி நீங்க இருக்கற பக்கமே தலை வச்சு படுக்கமாட்டோம்'ன்னு சொல்லிட்டு வந்துட்டாரு,'' என்றாள் சுபா.''நீ சொல்றது மனசுக்கு கஷ்டமாக இருக்கு. எனக்கு என்ன சொல்றதுன்னே புரியலை. சரிம்மா... உடம்பை பார்த்துக்க. லதா தனியா இருப்பா. பேரனுக்கு உடம்பு சரியில்லை. வரட்டுமா...''விடை பெற்றுச் சென்றாள் அகிலா.''அகிலாம்மா பேரனுக்கு, பிறந்த நாள் கொண்டாடறாங்களாம். சாயந்திரம் வீட்டுக்கு வரச் சொன்னாங்க. நீங்க வேலை முடிஞ்சு வரும் போது, ஏதாவது கிப்ட் வாங்கிட்டு வந்துடுங்க. போயிட்டு வருவோம்,'' என்று வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த வாசுவிடம் கூறினாள் சுபா.'வாங்க வாங்க...' இன்முகத்துடன் அகிலாவும், அவள் குடும்பத்தினரும், அவர்களை வரவேற்றனர். உறவினர்கள், நண்பர்கள் என்று கூட்டம் அதிகமிருந்தது. முக்கியமான உறவுகளிடம், சுபாவை, அறிமுகப்படுத்தினாள் அகிலா.''இவ சுபா. பக்கத்து வீட்டில் இருக்கா; எனக்கு பெண் மாதிரி. சுபா... இது, என் தங்கை; இவங்க என் அத்தை; இவங்க என் மருமகளோட அம்மா...'' என, அங்கிருந்தோரை, அவளிடம் அறிமுகப்படுத்தினாள்.எல்லாரும் ஒன்றுகூடி, பிறந்த நாள் கேக் வெட்டிக் கொண்டாட, அகிலாவின் பேரனை, அனைவரும் தூக்கி கொஞ்சி வாழ்த்து தெரிவித்தனர். தாங்கள் கொண்டு வந்த கிப்டை கொடுத்து, சாப்பிட்டு விடை பெற்றனர்.மறுநாள் அகிலா, சுபாவின் வீட்டிற்கு வர, ''வாங்கம்மா...விருந்தாளிகள் எல்லாம் ஊருக்கு போய்ட்டாங்களா!''''ஆமாம் சுபா. எல்லாரும் கிளம்பியாச்சு. சொந்தங்கள் கூடி, பிறந்தநாள் கொண்டாடினது, மனசுக்கு நிறைவாக இருந்தது. நீயும், வாசுவும் கலந்துகிட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். பாதாம் கேக் ஆர்டர் செய்தது நிறைய இருந்தது. கொடுத்துட்டு போகலாம்ன்னு வந்தேன். இந்தாம்மா.''வாங்கிக் கொண்டாள் சுபா.''நீங்க, எங்களுக்கு உறவாக இல்லாவிட்டாலும், இவ்வளவு பிரியமாக, அன்பாக இருக்கிறதுக்கு, நாங்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கோம். சொந்தங்களிடமிருந்து விலகி இருக்கிற எங்களுக்கு, உங்க அன்பு ஆறுதலாக இருக்கும்மா,'' வாசு சொல்ல, ''தம்பி, நான் ஒண்ணு சொன்னா, நீங்க இரண்டு பேரும் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?''''என்னம்மா இது. இப்படி கேட்கணுமா... சொல்லுங்கம்மா.''''என்னதான் கோபதாபம் இருந்தாலும், சொந்தங்களை ஒதுக்கி வாழுறது தப்புப்பா. பெத்தவங்க என்னைக்குமே, பிள்ளைகளின் நலனில், அக்கறை கொண்டவர்களாக தான் இருப்பாங்க. இன்றைக்கும், மனசிலே உங்களை நினைச்சுட்டு தான் இருப்பாங்க. நீங்க ரெண்டு பேரும், வேர் பிடிப்பு இல்லாத, நீர் தாவரங்களாக வாழ்ந்துட்டிருக்கீங்க. உங்களுக்கு, ஒரு பிரச்னை என்றால், உதவ கூட, ஆள் இல்லாமல், நிலைகுலைந்து போயிடறீங்க. நாளைக்கு உங்களுக்கு பிள்ளை பிறந்தா... தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தைன்னு உறவுகளைச் சுட்டிக்காட்டி, அன்பை பகிர்ந்துக்க சொல்லித் தர வேண்டாமா!''ஒவ்வொன்றாக வேர்களை பூமியில் பாய்ச்சி, வலிமையோடு வளரும் மரத்தினைப், போல, நம்பிக்கை, அன்பு, விட்டுக் கொடுத்தல், கடமை உணர்வு, இதை குடும்ப உறவுகளிடம் காண்பித்து, ஒரு வலிமையுள்ள மரமாக வாழணும்பா.''நீங்க ரெண்டு பேருமே, மனசில் ஏற்பட்டுள்ள மனக்கசப்பை, தூக்கி எறிந்து விட்டு, உங்க குடும்ப உறவுகளோடு, சந்தோஷமாக வாழணுங்கிறதுதான், இந்த அம்மாவோட ஆசைப்பா.''அன்புடன் பேசும் அகிலாவை பார்த்தனர். ''அம்மா, நீங்க விருப்பப்பட்டது போல, நாளைக்கு எங்களுக்கு குழந்தை பிறக்கும் போது, உங்க பேரனுக்கு பிறந்த நாள் விழா கொண்டாடின மாதிரி, சொந்தங்களை கூட்டி, சந்தோஷ மாக கொண்டாடுவோம்மா... நாளைக்கே ஊருக்கு போயி, எங்க அம்மா, அப்பாவைப் பார்த்து பேசுறோம். உங்களுக்கு சந்தோஷம் தானே.''''நீர்த்தாவரங்களாக இல்லாம, வேர் பிடிப்போடு வளரும், வலிமையுள்ள மரமாக, உறவுகளோடு இணைந்து வாழறதுதான், வாழ்க்கைங்கிறதை புரிஞ்சுக்கிட்டீங்களே... அதுவே எனக்கு போதும் பா,'' என்று மனநிறைவுடன் கூறினாள் அகிலா.***கீ. பரிமளா ராஜேந்திரன்