பாராட்டு மழையில் குவியும் பார்வையற்ற அதிகாரி ராம்குமார்!
'அபார திறமைசாலி, அபரிமிதமான புத்தசாலி...' என்று, பார்வையற்ற, தம் ஊழியர் ஒருவரை, 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா'வின், சென்னை வட்டாரத் தலைமையகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.அவர், யார்? மகத்தான பாராட்டைப் பெறும்படியாக அவர் செய்த காரியம் என்ன?படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டியான, சென்னையைச் சேர்ந்த ராம்குமார், ஐந்தாவது படிக்கும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக, இரண்டு கண் பார்வையும் பறி போனது.தங்களது ஒரே மகன் பார்வை இழந்த வருத்தம், பெற்றோர் மனதை வாட்டியது. அந்த வருத்தம், மகனின் வளர்ச்சியை பாதித்து விடாமல், அவரது பெற்றோர், சுந்தரி - பாலசுப்பிரமணியன் கண்ணும் கருத்துமாக வளர்த்தனர்.'எங்கள் மகனின் அறிவு மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு வாய்ப்பு கொடுங்கள்...' என்று, பொதுப்பிரிவு மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே படிக்க வைத்தனர்.கல்வி மட்டுமே தனக்கு மதிப்பும், மரியாதையும் தேடித்தரும்; தன் பெற்றோருக்கும் மகிழ்ச்சியையும் சேர்த்து தரும் என்பதால், பொறுப்புணர்ந்து படித்தார், ராம்குமார்; எல்லா தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் பெற்றார்.கல்லுாரியில் பி.காம்., முடித்து, சார்ட்ர்ட் அக்கவுண்ட்டிற்கு படித்துக் கொண்டிருக்கும் போதே, வங்கி தேர்வுகளை எழுதினார். இதன் காரணமாக, 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா'வில் வேலை கிடைத்தது.கம்ப்யூட்டர் பிரிவை கேட்டு பெற்றார், ராம்குமார். காரணம், அதில் அவர் சிறப்பு பயிற்சி பெற்றிருந்தார்.ராஜேஸ்வரி என்ற ஆசிரியை மூலம் கம்ப்யூட்டர் இயக்கத்தின் தொழில்நுட்பத்தை திறம்பட கற்று, அந்த அறிவை, தான் சார்ந்த வங்கி வளர்ச்சிக்கு பயன்படுத்த எண்ணினார்.இதற்கென இவர், 'டிஜிட்டல் டூல் கிட்' என்ற, 'ஸ்பெஷல் ஆப்'பை உருவாக்கினார். இவரது இந்த உருவாக்கத்திற்கு உறுதுணையாக, பிரேம்குமார் மற்றும் பரத்ராம் ஆகியோர் இருந்தனர்.இவர் கண்டுபிடித்த இந்த, 'ஆப்'பானது தலைமையகத்திற்கும், 1,500க்கும் மேற்பட்ட வங்கி கிளை மேலாளர்களுக்கும் தற்போது பெரிதும் உதவி வருகிறது.தவறுகள் இல்லாதது, துல்லியமானது, நேரமிச்சம் செய்வது, எளிமையாக கையாளலாம் என்பது போன்ற காரணங்களால், ராம்குமாரின் கண்டுபிடிப்பிற்கு, வங்கி டி.ஜி.எம்., முதல் சி.ஜி.எம்., வரை பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த, 'டூல் கிட்'டை மற்ற மாநில கிளைகளுக்கும் விரிவுபடுத்த ஆலோசித்து வருகின்றனர்.இதன் செயல்பாடுகளைப் பார்த்து, ராம்குமார் குழுவை அழைத்து பேசியுள்ளது, மைக்ரோ சாப்ட் நிறுவனம்.இப்போது, சென்னை தலைமை அலுவலகத்தில், மேனேஜர் பொறுப்பில் இருக்கிறார், ராம்குமார்.'நான் ஒரு டெக்னாலாஜி பிரியன். டெக்னாலஜியை பயன்படுத்தி, அன்றாட வாழ்வில் புதிதாக என்னவெல்லாம் செய்ய முடியும் என யோசித்துக் கொண்டே இருப்பேன்...' என்று உற்சாகமாய் பேசிய ராம்குமாரை வாழ்த்த விரும்புபவர்களுக்கான, மெயில் முகவரி: misterenthu@yahoo.comஎல். முருகராஜ்