போகியான, போக்கி!
சூரிய நாட்காட்டியின்படி, மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைமையான, துயரமான நினைவுகளை அழித்துப் போக்கும் இப்பண்டிகை, 'போக்கி' எனப்பட்டது.அந்த சொல் நாளடைவில் மருவி, 'போகி' என்றானது. அன்று, குப்பை மற்றும் தேவையற்ற பொருட்களை வீட்டிலிருந்து துாக்கி எறிவர்.ஆண்டுதோறும் போகி போன்றதொரு பண்டிகையை கொண்டாடி வருகின்றனர், ஸ்காட்டிஷ் இன மக்கள்.ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டின் கடைசி நாளன்று, அவர்கள் ஒரு இடத்தில் கூடி, நெருப்பை மூட்டி, அதில் பல விஷயங்களை எரியூட்டுகின்றனர். நடப்பு ஆண்டில் ஒதுக்க நினைத்த விஷயங்கள், மறக்க நினைத்த நிகழ்வுகள், செய்த தவறுகள் எல்லாவற்றையும் ஒரு பேப்பரில் எழுதி, அதை தீயில் போட்டு எரிக்கின்றனர்.சரி... போகிக்கு பழையனவற்றைப் போட்டு எரிக்கும் பழக்கம் எப்படி வந்தது?முந்தைய நாட்களில், விவசாயம் மட்டுமே, வாழ்வின் ஜீவாதாரத்திற்கான வருமானத்தைக் கொடுக்கும் தொழிலாக இருந்தது. அதற்காக, வயலில் இறங்கி வேலை செய்ய, ஆண் மகன்கள் மட்டுமே தேவைப்பட்டனர். அதனால், ஆண் குழந்தைகளை நிறைய பெற்றுக் கொள்ள விரும்பினர்.அந்த காலத்தில் விவசாயிகளிடம், ஒரு மூடப்பழக்கம் இருந்தது. அதாவது, போகியன்று, தம்பதியர் உபயோகித்த பழைய துணிகளை எரித்து விட்டால், தை பிறந்ததும் நல்ல காலம் பிறக்கும். பரம்பரை தொழிலை ஏற்று, தொடர ஆண் பிள்ளை பிறப்பான் என்று எண்ணினர். தை மாதப் பிறப்பன்று, புத்தாடை அணிவதை மேற்கொண்டனர்.கிராமங்களில், போகிக்கு காப்பு கட்டுதல் என்ற, ஒரு நிகழ்வு இருந்தது. மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகி அன்று, அதுவரை குடும்பத்தைப் பீடித்த வியாதிகளை போக்கும் பொருட்டு, மூலிகைகளால் தோரணம் கட்டுவர்.ஆவாரம்பூ, வேப்பம்பூ, பிரண்டை ஆகியவற்றில் எது கிடைக்கின்றனவோ அவற்றை தோரணமாக செய்து, வாயிலில் கட்டி வைப்பர். அதாவது, தை முதல் நாளிலிருந்து, வேனிற் காலம் துவங்கும். அதனால், நோய்கள் வருவதைத் தடுக்கவே அவ்வாறு செய்து வந்தனர். — ராஜிராதா